மும்பை: இந்திய அணியின் நட்சத்திர வீரரான ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தாலும், தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடுவேன் என்று தெரிவித்துள்ளார். ரோஹித் சர்மாவின் இந்த அறிவிப்பு காரணமாக, இந்திய அணி விளையாடும் 3 வகையான போட்டிகளுக்கும் 3 கேப்டன்களை நியமிக்க வேண்டிய கட்டாயம் பிசிசிஐ நிர்வாகத்திற்கு ஏற்பட்டுள்ளது.
வங்கதேசம், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக ஆஸ்திரேலியா மண்ணில் ரோஹித் சர்மாவின் செயல்பாடுகள் இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக மாறியது. இதனால் சிட்னி டெஸ்டில் இருந்து ரோஹித் சர்மா தாமாக வெளியில் அமர்ந்து கொண்டார்.

அப்போதே ரோஹித் சர்மாவுடன் பயிற்சியாளர் பும்ரா மற்றும் தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். ஆனால் ரோஹித் சர்மா ஓய்வை அறிவிக்க மறுத்தார். அதுமட்டுமல்லாமல் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய அணியை வழிநடத்த ஆர்வமாக இருப்பதாக தொடர்ச்சியாக பேசி வந்தார்.
இந்த நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி தேர்வு தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. அதில் ரோஹித் சர்மாவிடம் இருந்து கேப்டன் பதவியை பறிக்க பிசிசிஐ நிர்வாகம் முடிவு எடுத்தது. இதனால் ரோஹித் சர்மா வீரராக விளையாடுவாரா என்ற கேள்வி வர, இதுதொடர்பாக அவரிடம் ஆலோசனை நடத்தி இருக்கின்றனர்.
இதனால் கோபமடைந்த ரோஹித் சர்மா, ஒரு செய்தியாளர் சந்திப்பை கூட நடத்தாமல் இன்ஸ்டாகிராம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆனாலும் அந்த அறிவிப்பில் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவேன் என்றும் கூறி இருந்தார். இதனால் 2027 உலகக்கோப்பையை மனதில் வைத்து ரோஹித் சர்மா கூறி இருப்பதாக பார்க்கப்படுகிறது.
ரோஹித் சர்மாவின் இந்த அறிவிப்பு காரணமாக டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய 3 வகையான இந்திய அணிக்கும் 3 கேப்டன்களை நியமிக்க வேண்டிய தேவை பிசிசிஐ நிர்வாகத்திற்கு எழுந்துள்ளது. ஏற்கனவே டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் செயல்பட்டு வரும் நிலையில், டெஸ்ட் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.
இதனால் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு ரோஹித் சர்மா கேப்டனாக தொடரவுள்ளார். இதுவரை இந்திய கிரிக்கெட் அணி வரலாற்றில் 3 வகையான போட்டிகளுக்கும் 3 கேப்டன்கள் நியமனம் செய்யப்பதே கிடையாது. குறைந்தபட்சம் டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு ஒரு கேப்டன், ஒருநாள் மற்றும் டி20 அணிக்கு ஒரு கேப்டன் என்று தான் செயல்பட்டுள்ளனர். தோனி மற்றும் கும்ப்ளே இருந்த போது இந்த நடைமுறை கடைபிடிக்கப்பட்டது.
ஆனால் 3 கேப்டன்கள் என்பது அந்தந்த வீரர்களுக்கு இடையில் சிறிய மனக்கசப்பை உருவாக்க வாய்ப்புகள் உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் சுப்மன் கில் சிறப்பாக செயல்பட்டால், நிச்சயமாக அடுத்த கட்டமாக இந்திய அணியின் முழு பொறுப்பும் எப்போது தனக்கு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு தாமாகவே உருவாகும். அதேபோல் பிசிசிஐ நிர்வாகத்திற்கும் விளம்பர வருவாய் குறைய வாய்ப்புகள் உள்ளது. இதனால் கம்பீர் விரைவில் ரோஹித் சர்மாவை ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து நீக்க வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.