கொல்கத்தா: ராஜஸ்தான் அணி வெற்றிபெற 150 ரன்களை இலக்காக கொல்கத்தா அணி நிர்ணயித்துள்ளது. ராஜஸ்தான் அணி சார்பாக சாஹல் 25 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 56வது லீக் போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்த்து ராஜஸ்தான் அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் தோல்வியடையும் அணி பிளே ஆஃப் வாய்ப்பை இழக்கும் என்பதால், ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து கேகேஆர் அணி சார்பாக ஜேசன் ராய் - குர்பாஸ் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் ஜேசன் ராய் 10 ரன்களிலும், குர்பாஸ் 18 ரன்களிலும் போல்ட் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதையடுத்து இணைந்த வெங்கடேஷ் ஐயர் - நிதிஷ் ராணா கூட்டணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதன் காரணமாக 9 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 58 ரன்களை சேர்த்திருந்தது.
இந்த நிலையில் 10வது ஓவரை வீசிய அஸ்வின் பந்தில் அடுத்தடுத்து இரு சிக்சர்களை வெங்கடேஷ் ஐயர் பறக்கப்பட்டார். இதனால் உடனடியாக சாஹலை அட்டாக்கில் கொண்டு வரப்பட்டார். அதன் பலனாக சாஹல் பந்தில் நிதிஷ் ராணா 22 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்பின்னர் ஸ்பின்னர்களை அட்டாக் செய்வதற்காக ரஸ்ஸலை கொல்கத்தா அணி களமிறக்கியது. ஆனால் ஆசிஃப் வீசிய பந்தில் ரஸ்ஸல் 10 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனிடையே அதிரடியாக ஆடிய வெங்கடேஷ் ஐயர் 39 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார். ஆனால் சாஹல் பந்தில் அவரும் 42 பந்துகளில் 57 ரன்கள் குவித்து வெளியேறினார். இதனால் கொல்கத்தா அணி 16.1 ஓவர்களில் 127 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து ஷர்துல் தாக்கூரும் வந்த வேகத்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் மீண்டும் ஃபினிஷிங் செய்யும் பொறுப்பு ரிங்கு சிங் தலையில் விழுந்தது.
பின்னர் 18வது ஓவரை வீசிய சந்தீப் சர்மா பந்தில் அபாரமாக ஒரு சிக்சரை விளாசி ரிங்கு சிங் அசத்தினார். ஆனால் 19வது ஓவரை வீசிய சாஹல் பந்துவீச்சில் சிக்சர் அடிக்க முயன்று ரிங்கு சிங்கும் 16 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து கடைசி ஓவரில் 7 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட, கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ரன்கள் சேர்த்தது. ராஜஸ்தான் அணி சார்பாக சாஹல் 25 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டியுள்ளார்.