லண்டன்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் களமிறக்கப்பட வாய்ப்புகள் குறைவு என்று பார்க்கப்படுகிறது.
2021 மற்றும் 2023ஆம் ஆண்டிற்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடம் பிடித்த ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் வரும் ஜூன் 7ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் இறுதிப் போட்டியில் மோதுகிறது. இந்த மைதானம் ஆஸ்திரேலியா ஆடுகளத்தை ஒத்திருப்பதால், இந்திய அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. அதேபோல் இங்கிலாந்தில் சம்மர் சீசன் என்றாலும், சூரியனை பார்ப்பதே அபூர்வம் தான்.

இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்படும் என்று பார்க்கப்படுகிறது. இதனால் இரு அணிகளிலும் தலா ஒரு ஸ்பின்னர்கள் மட்டுமே களமிறக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. ஆஸ்திரேலியா அணி தரப்ப்பில் நேதன் லயன் நிச்சயம் இடம்பெறுவார். அதேபோல் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஜடேஜா அபாரமான ஃபார்மில் இருப்பதால், அவரை நீக்குவதற்கு வாய்ப்பே இல்லை.
அதுமட்டுமல்லாமல் ரிஷப் பண்ட் அணியில் இல்லாததால், இடதுகை பேட்ஸ்மேனான ஜடேஜா நிச்சயம் சேர்க்கப்படுவார். இதனால் அஸ்வினின் இடம் கேள்விக்குறியாகியுள்ளது. ஏற்கனவே கடந்த முறை இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்த போது, அஸ்வின் ஒரு போட்டியில் கூட களமிறங்கவில்லை. பும்ரா, சிராஜ், இஷாந்த் சர்மா மற்றும் உமேஷ் யாதவ் என்று 4 வேகப்பந்துவீச்சாளர்களுடன் தான் இந்திய அணி களமிறங்கியது. இதனால் இந்திய அணியில் அஸ்வின் சேர்க்கப்பட வாய்ப்புகள் குறைவு என்றே பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் இங்கிலாந்து மண்ணில் இதுவரை 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின், 18 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தி இருக்கிறார். இதனால் அஸ்வினுக்கு பதிலாக பவுலிங் ஆல் ரவுண்டரான ஷர்துல் தாக்கூர் சேர்க்கப்படவே அதிக வாய்ப்புகள் உள்ளது. அதேபோல் இந்திய அணிக்கு தேவைப்படும் X Factor வீரராகவும் ஷர்துல் தாக்கூர் இருப்பதால், அவருடன் இந்திய அணியில் முகமது ஷமி, சிராஜ், உமேஷ் யாதவ் ஆகியோர் சேர்க்கப்படுவார்கள் என்ற பார்க்கப்படுகிறது.