கொல்கத்தா: கொல்கத்தா - குஜராத் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் தொடங்குவதில் மழை காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் 4.15 மணிக்கு ஆட்டம் தொடங்கும் என்று நடுவர்கள் அறிவித்துள்ளனர்.
16வது ஐபிஎல் தொடரின் 39வது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியை எதிர்த்து நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா அணி களமிறங்கியது. கடந்த முறை இந்த இரு அணிகள் மோதிய ஆட்டத்தில் ரிங்கு சிங்கின் அபாரமான சிக்சர்களால் கேகேஆர் அணி வெற்றிப்பெற்றது. இதனால் இன்றைய ஆட்டம் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். குஜராத் அணியில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. கேகேஆர் அணியில் ஜேசன் ராய், உமேஷ் யாதவ் உள்ளிட்டோர் நீக்கப்பட்டு குர்பாஸ், ஷர்துல் தாக்கூர் மற்றும் ஹர்சித் ராணா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே டாஸின் போதே மைதானத்தின் மின் விளக்குகள் போடப்பட்டிருந்தது. இருப்பினும் போட்டி திட்டமிட்டபடி தொடங்கும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், திடீரென மொத்த மைதானமும் முன்னெச்சரிக்கையாக கவர்கள் மூலம் மூடப்பட்டது. இதனால் அதிக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து போட்டி நடுவர்கள் கேகேஆர் கேப்டன் நிதிஷ் ராணா மற்றும் குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர்.

மழை நின்றிருந்தாலும், மைதானத்தில் அதிக ஈரப்பதம் இருந்தது. இதனால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் முதல்முறையாக மழை காரணமாக ஆட்டம் தாமதமாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர். இந்த நிலையில் 4.15 மணிக்கு ஆட்டம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தாமதம் காரணமாக ஓவர்கள் குறைக்கப்படவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.