ஐதராபாத்: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரை வீசிய போது இதயத்துடிப்பு எகிறிவிட்டதாக கேகேஆர் அணியின் பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா அணி ரிங்கு சிங் மற்றும் நிதிஷ் ராணாவின் பொறுப்பான ஆட்டத்தால் 20 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் மட்டுமே சேர்ந்து சொந்த மண்ணில் தோல்வியடைந்தது.

கடைசி ஓவரில் ஐதராபாத் அணி 9 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற நிலையில், வருண் சக்கரவர்த்தி வெறும் 3 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். அதுமட்டுமல்லாமல் ஆடுகளம் சுழலுக்கு சாதகமாக இல்லாத பட்சத்தில், வேகத்தை கொண்டு வருண் சக்கரவர்த்தி ரன்களை கட்டுப்படுத்தினார். அதேபோல் நீண்ட தூரம் கொண்ட பவுண்டரி எல்லையை சிறப்பாக பயன்படுத்தி கொல்கத்தா அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தார்.
இந்த நிலையில் 4 ஓவர்களில் வெறும் 20 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்திய வருண் சக்கரவர்த்தி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதுகுறித்து வருண் சக்கரவர்த்தி பேசுகையில், கடைசி ஓவரை வீசும் போது என் இதயத்துடிப்பு எகிறிவிட்டது. ஆனால் ஓவரை வீசுவதற்கு முன்பாக நீண்ட தூர பவுண்டரி எல்லையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். அதேபோல் இரண்டாவது பவுலிங்கின் போது பந்து அதிகளவில் வழுக்கியது. அதனால் பவுண்டரி திட்டத்தோடு மட்டுமே பந்துவீசினேன்.
முதல் ஓவரில் நான் 12 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தேன். மார்க்ரம் இரு பவுண்டரிகளை விளாசி தள்ளினார். ஆனால் அடுத்த 3 ஓவர்களை சிறப்பாக வீசினேன். டி20 கிரிக்கெட் அப்படி தான் இருக்கும். கடந்த ஆண்டில் 85கிமீ வேகத்தில் தான்ன் பந்துவீசினேன். நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் கொஞ்சம் வேகத்தை அதிகரித்துள்ளேன். பயிற்சியில் ஏராளமானவற்றை முயற்சி செய்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.