அகமதாபாத்: ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா அணிக்கு எதிரான போட்டியை அகமதாபாத் மைதானத்தில் இருந்து வேறு மைதானத்திற்கு மாற்ற கோரிக்கை வைத்தது தெரிய வந்துள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இதற்கு அகமதாபாத் ரசிகர்களும் மறைமுக காரணமாக அமைந்தனர். அதேபோல் இந்த போட்டியில் பல்வேறு சர்ச்சைகளும் எழுந்துள்ளன.

பாகிஸ்தான் அணி வீரர்களை பார்த்து ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் எழுப்பியது, கேப்டன் பாபர் அசாமை கேலி செய்தது என்று ரசிகர்களால் ஏராளமான பாதிப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதேபோல் மைதானத்தில் பாகிஸ்தான் ரசிகர்களே இல்லாதது, பாகிஸ்தான் கொடியை கூட பார்க்க முடியாதது, பாகிஸ்தான் வீரர்களுக்கு ஆதரவு குரல் கூட டிஜே எழுப்பாதது என்று எண்ணற்ற குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. இதனை பாகிஸ்தான் அணியின் இயக்குநர் மிக்கி ஆர்தர் நேரடி குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.
இந்த நிலையில் உலகக்கோப்பை தொடருக்கு முன்பாகவே பாகிஸ்தான் அணி வீரர்களும், பாகிஸ்தான் அணி நிர்வாகமும் அகமதாபாத் மைதானத்தில் விளையாட விருப்பம் காட்டவில்லை என்று தெரிய வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியிடப்படுவதற்கான முன்பாகவே பாகிஸ்தான் கிரிக்கெட் தலைவராக இருந்த நஜாம் சேதி ஐசிசி-க்கு, அகமதாபாத் மைதானத்தில் இறுதிப்போட்டியை தவிர எந்த ஆட்டத்திலும் விளையாட விருப்பமில்லை.
இதனால் அகமதாபாத் மைதானத்தில் திட்டமிடப்பட்டுள்ள போட்டிகளை சென்னை, பெங்களூரு அல்லது கொல்கத்தா மைதானத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஆனால் பாகிஸ்தான் அணியின் கோரிக்கையை ஐசிசி ஏற்காததால், அகமதாபாத் மைதானத்திலேயே இந்திய அணிக்கு எதிரான போட்டியில் விளையாட வேண்டிய நிலைக்கு பாகிஸ்தான் அணி தள்ளப்பட்டுள்ளது. அதேபோல் பாகிஸ்தான் நிர்வாகிகள் அச்சமடைந்ததை போலவே, பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.