மான்செஸ்டர்: இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டதற்கு ஐபிஎல்-லை குறை சொல்வதில் அர்த்தமில்லை என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி, மான்சஸ்டரில் இன்று (செப்.10) தொடங்கவிருந்தது.

இந்த டெஸ்ட் தொடரில், இந்தியா 2-1 என்று முன்னிலை பெற்ற நிலையில், ரசிகர்கள் மத்தியில் இப்போட்டிக்கு பெரும் எதிர்பார்ப்பிற்கு இருந்தது
ஆனால், இந்திய அணி நிர்வாகிகள் மத்தியில் பரவிய கொரோனா தொற்று காரணமாக, கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாட இந்தியா மறுத்துவிட்டது. இதனால், கடைசி டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது. இந்த போட்டியை அட்லீஸ்ட் டிரா செய்தால் கூட, இந்தியா 2-1 என்று கோப்பையை கைப்பற்றி இருக்கும். ஆனால், இந்த அருமையான வாய்ப்பு கொரோனா காரணமாக கைநழுவிப் போனது. முன்னதாக, லண்டன் ஓவலில் நடந்த 4வது டெஸ்ட் போட்டியின் போது அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண், ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனால், அவர்கள் 3 பேரும் தனிமைப்படுத்தப்பட்டனர். இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிசியோதெரஃபிஸ்ட் நிதின் பட்டேலும் தனிமைப்படுத்தப்பட்டார்.
இந்த சூழலில், இந்திய கிரிக்கெட் அணியின் உதவி பிசியோதெரஃபிஸ்ட் யோகேஷ் பார்மருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவருடன் இந்திய வீரர்கள் நெருங்கி பணியாற்றியதால், இந்திய அணியில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி, கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நடைமுறைப்படி இந்திய அணியினர் அனைவரும் ஹோட்டல் அறையில் தனிமைப்படுத்தப்பட்டனர். இதனால் வீரர்கள் யாருமே நேற்று பயிற்சியில் ஈடுபடவில்லை. பயிற்சி மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பும் ரத்து செய்யப்பட்டது. அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, இரு அணி நிர்வாகங்களும் நேற்று முதல் தொடர்ந்து ஆலோசித்து வந்தன. அதேசமயம், இந்திய அணியினருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் யாருக்கும் தொற்று இல்லை என்பது உறுதியானது. இருந்தாலும், 5 வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து முதலில் அறிக்கை வெளியிட்ட இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், "5வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்படுகிறது. இதன் மூலம் ரசிகர்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றம் இருக்கும் என்பதை அறிகிறோம். மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். இது குறித்த மேலும் தகவல்களை விரைவில் தெரிவிப்போம்' என்று குறிப்பிட்டிருந்தது. இதன் பிறகு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்ட அறிக்கையில், "இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மற்றும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (இசிபி) இணைந்து மான்செஸ்டரில் நடைபெறவுள்ள 5 வது டெஸ்ட் போட்டியை நிறுத்த முடிவு செய்துள்ளது. BCCI மற்றும் ECB இந்த கடைசி டெஸ்ட் போட்டியை எப்படியாவது நடத்த பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியது. இருப்பினும், இந்திய அணி நிர்வாகத்தில் கோவிட் -19 பரவுவதால், இந்த டெஸ்ட் போட்டியை நிறுத்தும் முடிவை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டோம். பிசிசிஐ மற்றும் இசிபி இடையே உள்ள வலுவான உறவின் காரணமாக, ரத்து செய்யப்பட்ட டெஸ்ட் போட்டியை வேறு தேதியில் நடத்த இங்கிலாந்து வாரியத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு வாரியங்களும் இந்த டெஸ்ட் போட்டியை மீண்டும் நடத்த ஒரு சரியான நேரத்தை கண்டறியும்." என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
இந்நிலையில், வரும் செப்.19ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இரண்டாம் கட்ட ஐபிஎல் போட்டிகள் தொடங்கவுள்ளன. முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதவுள்ளன. கடைசி டெஸ்ட் போட்டி செப்.14ம் தேதி முடிவடைய இருந்த நிலையில், வெறும் நாட்கள் இடைவெளிக்கு பிறகு ஐபிஎல் தொடங்குகிறது. இந்த ஐபிஎல் தொடர் காரணமாகவே, இந்திய அணி டெஸ்ட் போட்டியில் விளையாட மறுப்பு தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின. கடைசி டெஸ்ட்டில் விளையாடி கொரோனா தொற்று ஏற்பட்டால், ஐபிஎல் போட்டிகளில் விளையாட முடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் இந்திய அணியினர் மறுத்ததாக சமூக தளங்களில் விமர்சிக்கப்பட்டது.
இந்நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தில் தலைமை செயல் அதிகாரி டாம் ஹாரிஸன் கூறுகையில், "இந்த டெஸ்ட் போட்டியை வேறு சில தருணத்தில் எங்களால் நடத்த முடியும் என்று நம்புகிறோம், ஆனால் அந்த போட்டி, இந்த டெஸ்ட் தொடரின் தொடர்ச்சியாக இருக்காது. ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட்டாக விளையாடப்படும். ஐபிஎல் காரணமாகத்தான் கடைசி டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது என்று கூறுவதில் அர்த்தமில்லை. எங்களுக்கும் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு இடையே வலிமையான நட்பு இருக்கிறது. நாங்கள் இந்த சிக்கலில் இருந்து மீண்டு, முன்பை விட வலிமையாக திரும்ப வருவோம்" என்று கூறியுள்ளார்.