
5வது டி20 போட்டி
5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 2 - 2 என சமநிலையில் உள்ளது. வெற்றியை தீர்மானிக்கும் 5வது டி20 இன்று நடைபெறுகிறது. இதில் இந்திய அணியில் கே.எல்.ராகுல் நீக்கப்பட்டார். அதே போல் பந்துவீச்சில் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா - விராட் கோலி களமிறங்கினர்.

ஹிட் மேன்
ஆட்டத்தின் முதல் ஓவர் முதலே ரோகித்தும், விராட் கோலியும் பந்துகளை சிதறவிட்டனர். அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா 34 பந்துகளில் 64 ரன்களை விளாசி ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் அவுட்டானார். இதில் 4 பவுண்டரிகளும் 5 சிக்ஸர்களும் அடங்கும். இதனையடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் ரோகித் விட்ட இடத்தில் இருந்து அதே அதிரடியை தொடர்ந்தார். 17 பந்துகளில் 32 ரன்களை அவர் விளாசிய போது ஒற்றை கையில் கேட்ச் பிடித்து ஜோர்டன் அவுட்டாக்கினார்.

கேப்டன் கோலி
மறுமுனையில் சிறப்பாக ஆடி வந்த விராட் கோலி 36 பந்துகளில் அரைசதம் அடித்தார். சர்வதேச டி20 போட்டிகளில் அவர் அடிக்கும் 28வது அரை சதம் இதுவாகும். அதே போல டி20 போட்டிகளில் கேப்டனாக அதிக அரை சதம் அடித்தவர்கள் பட்டியலில் 12 அரை சதத்துடன் முதல் இடம் பிடித்தார். அவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய ஹர்திக் பாண்டியா வழக்கம் போல் தனது அட்டகாசமான ஆட்டத்தை காட்டினார்.

இமாலய இலக்கு
இருவரும் சேர்ந்து இங்கிலாந்தின் பந்துவீச்சை நொறுக்கியதில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்களை குவித்தது. கேப்டன் விராட் கோலி 80 ரன்களுடனும், ஹர்த்திக் பாண்டியா 39 ரன்களுடனும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். டெஸ்ட் தொடரில் அடைந்த தோல்விக்கு பழிவாங்க வேண்டும் என்பதால் இங்கிலாந்து இந்த இமாலய இலக்கை எட்ட கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications