மும்பை: இங்கிலாந்துக்கு எதிரான டி20 உலகக்கோப்பை போட்டியில் நூலிழையில் வெற்றியைத் தவறவிட்டாலும், எங்களின் போராட்டத்தைப் பார்த்துவிட்டீர்கள் அல்லவா? இனிவரும் போட்டிகளில் எங்களை எந்த அணியும் சாதாரணமாக எடைபோட முடியாது என்று நேபாள அணியின் கேப்டன் ரோகித் பவுடல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில், இங்கிலாந்து அணி கடைசி ஓவர் வரை போராடி 4 ரன்கள் வித்தியாசத்தில் நேபாளத்தை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் இங்கிலாந்துக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய நேபாள அணியின் ஆட்டம் அனைவரையும் கவர்ந்தது.

தோல்விக்குப் பிறகு பேசிய நேபாள கேப்டன் ரோகித் பவுடல், தனது வீரர்களின் ஆட்டம் குறித்துப் பெருமிதம் தெரிவித்தார். "நாங்கள் வெறும் பங்கேற்பதற்காக இந்த உலகக்கோப்பைக்கு வரவில்லை, போட்டியிட்டு வெல்வதற்காகவே வந்துள்ளோம்" என்று அவர் கூறினார்.
"எங்கள் வீரர்கள் 110 சதவீத உழைப்பைக் களத்தில் கொட்டினார்கள். அவர்களை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நாங்கள் எங்களின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினால், எந்த அணியையும் வீழ்த்த முடியும் என்று ஒரு அணியாக நம்புகிறோம். இன்று நாங்கள் எங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினோம்" என்றார்.
இந்தப் போட்டியின் முடிவு எங்களுக்குச் சாதகமாக இல்லைதான். ஆனால் எங்கள் ஆட்டத்தைப் பார்த்த பிறகு, இனி எந்த ஒரு பெரிய அணியும் எங்களைப் போன்ற சிறிய அணிகளைச் சாதாரணமாக எடைபோடாது என்று நம்புகிறேன். ஒவ்வொரு அணியையும் மதிக்க வேண்டும் என்பதை அவர்கள் இப்போது உணர்ந்திருப்பார்கள். இதுதான் இந்தப் போட்டியிலிருந்து நாங்கள் கற்றுக்கொண்ட பாடம்" என்று ரோகித் பவுடல் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 184 ரன்கள் குவித்தது. 185 ரன்கள் என்ற கடினமான இலக்கைத் துரத்திய நேபாள அணியில், கேப்டன் ரோகித் பவுடல் (39), திபேந்திர சிங் ஐரி (44) ஆகியோர் சிறப்பான அடித்தளம் அமைத்தனர். கடைசி நேரத்தில் களமிறங்கிய லோகேஷ் பாம் 20 பந்துகளில் 39 ரன்கள் விளாசி இங்கிலாந்தை மிரட்டினார்.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இங்கிலாந்து வீரர் சாம் கரன் துல்லியமாக யார்க்கர்களை வீசி 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார். "கடைசி ஓவரை சாம் கரன் மிகச் சிறப்பாக வீசினார்," என்று நேபாள கேப்டன் ரோகித் பவுடல் அவரைப் பாராட்டினார்.
இங்கிலாந்து - நேபாளம் மோதிய போட்டியை பார்க்க சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட நேபாள ரசிகர்கள் மும்பை வான்கடே மைதானத்திற்கு நேரில் வந்து இருந்தனர். எனவே, சொந்த மண்ணில் ஆடுவதைப் போலத் தான் நேபாள அணி விளையாடியது.
அது பற்றி பேசுகையில், "காத்மாண்டுவில் இருந்தும், நேபாளம் முழுவதிலிருந்தும் ரசிகர்கள் எங்களுக்கு அளித்த ஆதரவு நம்பமுடியாதது. எங்கள் ஆட்டத்தை நினைத்து ஒட்டுமொத்த நாடும் பெருமைப்படும் என்று நான் நம்புகிறேன்" என்று ரோகித் பவுடல் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். தோல்வியடைந்தாலும், நேபாள அணியின் இந்த வீரமிக்க போராட்டம் உலக கிரிக்கெட் அரங்கில் அவர்களுக்கு ஒரு தனி மரியாதையைப் பெற்றுத் தந்துள்ளது.