மும்பை: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5வது லீக் போட்டியில், பலம் வாய்ந்த இங்கிலாந்து அணி, நேபாள அணியிடம் தோல்வியின் விளிம்பு வரை சென்று, கடைசி ஓவரில் நூலிழையில் வெற்றி பெற்றது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த த்ரில்லர் போட்டியில், கடைசி ஓவரில் சாம் கரனின் துல்லியமான யார்க்கர்கள் இங்கிலாந்து அணியைக் காப்பாற்றின.
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, ஜேக்கப் பெத்தல் (55) மற்றும் ஹாரி புரூக் (53) ஆகியோரின் அரைசதங்களால் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது.

185 ரன்கள் என்ற கடினமான இலக்கைத் துரத்திய நேபாள அணி, ஆரம்பம் முதலே இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்குச் சவால் அளித்தது. திபேந்திர சிங் ஐரி (44) மற்றும் கேப்டன் ரோகித் பவுடல் (39) சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். ஆட்டம் இறுதிக்கட்டத்தை எட்டியபோது மைதானத்தில் அனல் பறந்தது.
கடைசி 3 ஓவர்களில் நேபாள வெற்றிக்கு 46 ரன்கள் தேவைப்பட்டன. 18வது ஓவரை வீசிய ஜோப்ரா ஆர்ச்சர் 22 ரன்களை வாரி வழங்கினார். அந்த ஓவரில் லோகேஷ் பாம் இரண்டு இமாலய சிக்ஸர்களைப் பறக்கவிட்டு இங்கிலாந்தை மிரள வைத்தார். 19வது ஓவரை வீசிய லூக் வுட், 14 ரன்கள் கொடுத்தாலும் குல்சன் ஜாவை அவுட்டாக்கி சற்று நெருக்கடி கொடுத்தார்.
கடைசி ஓவரில் நேபாள வெற்றிக்கு 10 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டன. இங்கிலாந்து கேப்டன் பட்லர் பந்தை சாம் கரனிடம் கொடுத்தார்.
இறுதியில் இங்கிலாந்து அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
வெற்றி பெற வேண்டிய போட்டியை நேபாளம் கடைசி நேரத்தில் கோட்டை விட்டது. இருப்பினும், இங்கிலாந்து போன்ற பெரிய அணியை கடைசி வரை பயமுறுத்திய நேபாள வீரர்களின் போராட்டம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. 4 ஓவர்கள் வீசி 27 ரன்கள் மட்டும் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்திய சாம் கரன் இங்கிலாந்தின் ஹீரோவாக மாறினார்.