துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த சர்வதேச லீக் டி20 (ILT20) கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில், மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்திற்குச் சொந்தமான 'எம்ஐ எமிரேட்ஸ்' அணியை வீழ்த்தி, 'டெசர்ட் வைப்பர்ஸ்' அணி முதல் முறையாகச் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது. முன்னாள் சிஎஸ்கே வீரரும், வைப்பர்ஸ் அணி கேப்டனுமான சாம் கரனின் ஆல்-ரவுண்டர் ஆட்டமே இந்த வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்ற இறுதிப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த டெசர்ட் வைப்பர்ஸ் அணிக்குத் தொடக்கம் முதலே சாம் கரன் நம்பிக்கை அளித்தார். ஒரு கேப்டனாகப் பொறுப்புடன் விளையாடிய அவர், 51 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 74 ரன்களைக் குவித்தார்.

சாம் கரனின் இந்தத் அதிரடி மற்றும் மேக்ஸ் ஹோல்டன் (41), டான் லாரன்ஸ் (23) ஆகியோரின் பங்களிப்பால் வைப்பர்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் என்ற வலுவான ஸ்கோரை எட்டியது.
183 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய எம்ஐ எமிரேட்ஸ் அணிக்கு, வைப்பர்ஸ் பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். பவர்-பிளேவிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி திணறியது.
நடுவரிசையில் ஷகிப் அல் ஹசன் (36) மற்றும் பொல்லார்ட் (28) ஆகியோர் இணைந்து 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துச் சற்று ஆறுதல் அளித்தாலும், வெற்றிக்கு அது போதுமானதாக இல்லை.
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா (3 விக்கெட்) மற்றும் டேவிட் பயன் (3 விக்கெட்) ஆகியோரின் துல்லியமான தாக்குதலில் எமிரேட்ஸ் அணி 18.3 ஓவர்களிலேயே 136 ரன்களுக்குச் சுருண்டது. இதன் மூலம் 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற டெசர்ட் வைப்பர்ஸ் அணி, தனது முதல் ILT20 கோப்பையை முத்தமிட்டது.
வெற்றிக் கோப்பை மட்டுமல்லாது தனிநபர் விருதுகளையும் சாம் கரனே அள்ளிச் சென்றார். இறுதிப்போட்டியில் 74 ரன்கள் குவித்ததற்காக ஆட்டநாயகன் விருது வென்றார். இந்த தொடரின் மிகச்சிறந்த வீரருக்கான சிவப்பு பெல்ட் விருது அவருக்கு அளிக்கப்பட்டது. மேலும், தொடரில் அதிக ரன்கள் (397 ரன்கள்) குவித்ததற்கான பச்சை பெல்ட் விருதும் அவருக்கே வழங்கப்பட்டது.
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்காக விளையாடி இந்திய ரசிகர்களின் மனதை வென்ற சாம் கரன், தற்போது மும்பை இந்தியன்ஸ் உரிமையாளர்களின் அணியை இறுதிப்போட்டியில் வீழ்த்திக் கோப்பையை வென்றுள்ளது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.