செயின்ட் லூசியா: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்த டி20 தொடரை 3 - 0 என இங்கிலாந்து அணி கைப்பற்றி உள்ளது. இந்த தொடரில் இன்னும் இரண்டு போட்டிகள் மீதமுள்ள நிலையில் முதல் மூன்று போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
மூன்றாவது டி20 போட்டி மழையால் 50 நிமிடங்கள் தாமதமாகவே துவங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 37 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து மோசமான நிலையில் இருந்தது. இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் சகிப் மஹ்மூத் அபாரமாக பந்து வீசி 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

அதன் பின் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ரோவ்மன் பாவல் மற்றும் ரொமாரியோ ஷெப்பர்ட் கூட்டணி அமைத்து ரன் குவித்தனர். ரோவ்மன் பாவல் 41 பந்துகளில் 54 ரன்களும், ரொமாரியோ 28 பந்துகளில் 30 ரன்களும் சேர்த்தனர். பத்தாம் வரிசையில் இறங்கிய அல்சாரி ஜோசப் 19 பந்துகளில் 21 ரன்கள் சேர்த்தார்.
இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் சேர்த்தது. 37 ரன்களுக்கு 5 விக்கெட் என்ற சரிவில் இருந்து 145 ரன்கள் குவித்து வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்துக்கு சவால் விட்டு இருந்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து அணியும் விக்கெட் வீழ்ச்சியை சந்தித்தது. அந்த அணியின் நான்கு பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டம் இழந்தனர்.
5.3 ஓவர்களில் 37 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து இருந்தது இங்கிலாந்து அணி. வில் ஜாக்ஸ் 32 ரன்களும், சாம் கர்ரன் 41 ரன்களும் எடுத்து இருந்தனர். லியாம் லிவிங்ஸ்டன் 39 ரன்கள் எடுத்தார். 19 வது ஓவரில் லிவிங்ஸ்டன் ஆட்டமிழந்தார். 7 விக்கெட்களை இழந்த நிலையில் கடைசி ஓவரில் இங்கிலாந்து அணி வெற்றி இலக்கை எட்டியது.
19.2 ஓவர்களில் 149 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இங்கிலாந்து அணி. ஐந்து ஆண்டுகளுக்கு பின் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் இங்கிலாந்து அணி டி20 தொடரை கைப்பற்றி இருக்கிறது.