லண்டன்: 20 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் இந்தியா, ஆஸ்திரேலியா மண்ணில் அடைந்த வெற்றி தான் சிறந்த தருணம் என்று இங்கிலாந்து ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார். டெஸ்ட் போட்டிகள் மற்றும் தொடர்களை வெல்வது மட்டுமே பிடித்தமான ஒன்று என்றும் ஆண்டர்சன் கூறியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இங்கிலாந்து கிரிக்கெட் ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓய்வு பெற்றுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 114 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் ஆண்டர்சன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இதன் மூலமாக ஜேம்ஸ் ஆண்டர்சன் 188 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 704 விக்கெட்டுகளுடன் ஓய்வு பெற்றுள்ளார். இந்த போட்டிக்கு பின் ஜேம்ஸ் ஆண்டர்சன் பேசுகையில், 20 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் பயணம் அற்புதமான ஒன்றாக அமைந்தது. இன்றைய நாளில் ரசிகர்களின் உணர்வுகளை பார்த்தது நெகிழ்ச்சியாக உள்ளது. கொஞ்சம் ஸ்பெஷலான தருணம் என்று நினைக்கிறேன்.
ஒவ்வொரு முறையும் டெஸ்ட் ஜெர்சியை அணிந்த போதும் இங்கிலாந்து அணியின் வெற்றிக்காகவே விளையாடி இருக்கிறேன். முதல் நாள் ஆட்டத்தில் எனது மகள்கள் பெல் அடித்த ஆட்டத்தை தொடங்கியது புதுமையாக இருந்தது. 20 ஆண்டுகள் தொடர்ந்து கிரிக்கெட் விளையாட வேண்டுமென்றால், அவர்களின் ஆதரவு இல்லாமல் முடியாது. இது ஒரு குடும்ப பயணம் என்றே நினைக்கிறேன். எப்போது டெஸ்ட் போட்டிகள் மற்றும் தொடர்களை வெல்வதே முதன்மையான ஈடுபாடாகும்.
அதிலும் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய மண்ணில் அடைந்த வெற்றிகளை மறக்க முடியாது. மிகவும் ஸ்பெஷலான தருணம். இந்த ஓய்வு நிச்சம் கடினமாகவே உள்ளது. ஏனென்றால் ஒரு போதும் பொறுப்புகளில் இருந்து விலகி செல்ல மாட்டேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான எமோஷன் நம் மனதில் இருக்கும். மாலை நேரத்தில் கேப்டன் நம் கையில் பந்தை கொடுக்கும் போது, நமது பிடிவாதத்தை காட்ட வேண்டிய தருணமாக இருக்கும்.
மனைவியுடன் நல்ல பார்ட்னர்ஷிப்பையும் உருவாக்கியதால், கிரிக்கெட்டிற்கு வெளியிலும் உதவியாக இருந்தது. ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டை விளையாடி இருக்கிறேன். ஆனால் ஒருநாளும் டெஸ்ட் கிரிக்கெட் கொடுத்த நிம்மதியையும், மன நிறைவையும் வேறு எதுவும் வழங்கியதில்லை. இதற்காக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டை குறை சொல்வதாக நினைக்க வேண்டாம். ஏனென்றால் டி20 கிரிக்கெட் தான் இப்போது பல்வேறு அற்புதங்களை செய்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.