
தலைக்கீழ் மாற்றம்
இங்கிலாந்து அணியின் பேட்டிங் வரிசை மிரட்டலாக இருந்தது. ஜேசன் ராய், பாரிஸ்டோ, ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜாஸ் பட்லர், லிவிங்ஸ்டோன், மொயின் அலி என மிரட்டலான பேட்டிங் இந்திய அணி எப்படி சமாளிக்கும் என கருதப்பட்டது. ஆனால் நடந்ததோ தலைக்கீழ், இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இங்கிலாந்து அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

பும்ரா பந்துவீச்சு
பும்ரா வீசிய பந்து, ஆப் சைடிலிருந்து ஸ்விங் ஆகி ஜேசன் ராய் ஸ்டம்பை பதம் பார்த்தது. இதன் பின்னர் ஜோ ரூட் களமிறங்கி, அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட, பும்ரா வீசிய பந்து நன்றாக பவுன்ஸ் ஆக, அதனை கணிக்க முடியாமல் அடித்து விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டிடம் பிடிப்பட்டார்.

அடுத்தடுத்து டக்அவுட்
இதனையடுத்து, அதிரடி ஆல்ரவுண்டர் ஸ்டோக்ஸ் பேட்டிங் செய்ய வந்தார். அப்போது முகமது ஷமி வீசிய இன் ஸ்விங்கர் பந்தை அடிக்க முடியாமல் தடுமாறிய ஸ்டோக்ஸ், ரிஷப் பண்டின் அபார கேட்சால் பிடிப்பட்டார். இதன் மூலம் ஜோ ரூட், ஸ்டோக்ஸ், ஜேசன் ராய் என மூன்று டாப் வீரரும் டக் அவுட்டாகி ஆட்டமிழந்தார்.

இங்கிலாந்து திணறல்
இதே போன்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லிவிங்ஸ்டோனும் பும்ராவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் கிளின் போல்டாகினார். அவரும் டக் அவுட்டாகி வெளியேறினார். டெஸ்ட் போட்டியில் அதிரடியாக விளையாடி சதம் விளாசிய பாரிஸ்டோ 7 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து அணி 26 ரன்கள் சேர்ப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.


Click it and Unblock the Notifications











