ராகுல் ஏமாற்றம்
இங்கிலாந்து அணியில் மார்க் வுட், டேவிட் மாலன் ஆகியோர் இல்லை. இந்த நிலையில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ராகுல் வழக்கம் போல் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 9 ரன்னில் முதல் விக்கெட்டை இழந்தது. இதனையடுத்து 28 பந்துகளை எதிர்கொண்ட ரோகித் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் இந்திய அணி 56 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாட முற்பட்டு 14 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
ஹர்திக் அதிரடி
இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்து தடுமாறிய நிலையில், விராட் கோலி, பாண்டியா ஜோடி பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டனர். கோலி 40 பந்துகளில் அரைசதம் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஒரு கட்டத்தில் பொறுமையாக விளையாடிய ஹர்திக் பாண்டியா, ஒரே ஓவரில் 2 சிக்சர் விளாசினார்.
169 ரன்கள் இலக்கு
இதே போன்று ஆட்டத்தின் 19வது ஓவரில் இந்திய அணி 20 ரன்களை விளாசியது. அந்த ஆட்டத்தின் கடைசி பந்தில், பென் ஸ்டோக்ஸ் கேட்ச்சை விட்டது, திருப்புமுனையாக அமைந்தது. ஹர்திக் பாண்டியா 29 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதே போன்று கடைசி ஓவரில் இந்திய அணி 12 ரன்கள் எடுத்தது. கடைசி பந்தில் அவர் பவுண்டரி அடித்தாலும் ஹர்திக் பாண்டியா ஹிட் விக்கெட் ஆக்கி வெளியேறினார். இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. கடைசி 5 ஓவரில் இந்திய அணி 68 ரன்கள் எடுத்தது.
இங்கிலாந்து அபாரம்
169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. இந்திய பவுலர்களின் பந்துவீச்சை இங்கிலாந்து வீரர்கள் மைதானத்தின் நான்கு பக்கமும் சிதறடித்தனர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய பவுலர்கள் தடுமாறினர். சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என அனைத்து பந்துகளையும் தயவு தாட்சண்யம் பார்க்காமல் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ் ஜோடி அடுத்தடுத்து அரைதம் கடந்தனர். இதன் மூலம் இங்கிலாந்து அணி 16 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை எட்டியது. பட்லர் 80 ரன்களும், அலெக்ஸ் ஹெல்ஸ் 86 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வித்திட்டனர்.