தள்ளிவைக்கப்பட்ட தொடர்
ஐபிஎல் 2021 தொடர் நேற்றைய தினம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. வீரர்களுக்கு ஏற்பட்ட தொடர் கொரோனா பாதிப்புகளால் இந்த கடினமான முடிவை பிசிசிஐ எடுத்துள்ளது. தொடர்ந்து ரசிகர்களுக்கு சிறப்பான அனுபவங்களை கொடுத்துவந்த ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
கண்டிப்பாக நடத்தப்படும்
இந்த போட்டிகளை மீண்டும் நடத்துவதற்கான கால நேரத்தை பார்த்து வருவதாக தற்போதே ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் தற்போது ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் கண்டிப்பாக மீண்டும் திரும்ப நடத்தப்படும் என்றும் மேலும் தெரிவித்துள்ளது.
மில்லியன் டாலர் கேள்வி
தற்போது பிசிசிஐயின் அடுத்த தலைவலியாக டி20 உலக கோப்பையும் வரிசையில் வந்துள்ளது. ஐபிஎல் போட்டிகள் தள்ளிப் போயுள்ள இந்நிலைல் டி20 உலக கோப்பை திட்டமிட்டபடி இந்தியாவில் நடத்தப்படுமா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. ஆயினும் திட்டமிட்டபடி இந்தியாவில் டி20 உலக கோப்பை தொடர் நடத்தப்படும் என்று பிசிசிஐ சார்பில் கூறப்பட்டுள்ளது.
நாடுகளுக்கு திரும்பும் வீரர்கள்
ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் இந்திய வீரர்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர். இதேபோல வெளிநாட்டு வீரர்களும் தங்களது நாடுகளுக்கு இன்றுமுதல் திரும்பி வருகின்றனர். ஆஸ்திரேலிய வீரர்கள் மட்டும் நாடு திரும்புவதில் சிறிது தாமதம் ஏற்படும் என்று தெரிகிறது.
நாடு திரும்பிய வீரர்கள்
இந்நிலையில் இன்றைய தினம் இங்கிலாந்து வீரர்கள் ஜோஸ் பட்லர், மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், ஜேசன் ராய், சாம் பில்லிங்ஸ், ஜானி பேர்ஸ்டோ, சாம் கர்ரன் மற்றும் டாம் கர்ரன் ஆகியோர் இன்றைய தினம் பிரிட்டனுக்கு பயணம் மேற்கொண்டு தங்களது நாட்டை அடைந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் அங்கு தங்களது குவாரன்டைனை முடித்துவிட்டு வீடுகளுக்கு திரும்புவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.