பிரிஸ்டல் : இங்கிலாந்து அணி வீரர்கள் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் ஒருநாள் போட்டியில் அயர்லாந்து பந்துவீசை அடித்து துவைத்தனர்.
அதிலும் முதல் ஓவரின் முதல் நான்கு பந்துமே பவுண்டரி எல்லையை தாண்டியது. ஆனாலும், இந்தப் போட்டியில் அயர்லாந்து மழையால் தப்பியது.

இங்கிலாந்து - அயர்லாந்து இடையே ஆன மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டி பிரிஸ்டல் நகரில் நடைபெற்றது. இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.
அந்த அணியின் துவக்க வீரர் பில் சால்ட் முதல் ஓவரின் முதல் நான்கு பந்துகளில் 3 ஃபோர், ஒரு சிக்ஸ் அடித்து போட்டியை துவக்கி வைத்தார். அதன் பின் அவரும், மற்றொரு துவக்க வீரர் வில் ஜாக்கும் அதிரடியில் இறங்கினர்.
ஜாக் 21 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். சால்ட் 28 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார். ஸாக் கிரவ்ளி 42 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். பென் டக்கெட் அதிரடியாக ஆடி சதன் கடந்தார். அவர் 78 ரன்களில் 107 ரன்கள் எடுத்து இருந்த போது மழை
குறுக்கிட்டது. அதை அடுத்து போட்டி கைவிடப்பட்டது.
31 ஓவர்களில் இங்கிலாந்து அணி 280 ரன்கள் குவித்து இருந்தது. இன்னும் 19 ஓவர்களில் அதிக விக்கெட்களை இழக்காமல் இங்கிலாந்து அணி ஆடி இருந்தால் நிச்சயம் 400 ரன்களை கடந்து இருக்கும். நல்ல வேளையாக மழையால் அயர்லாந்து அணி கடினமான போட்டியில் இருந்து தப்பியது.
பில் சால்ட் முதல் ஆறு ஓவர்களுக்குள் அரைசதம் கடந்தது இந்தப் போட்டியில் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. அவர் 22 பந்துகளில் அரைசதம் கடந்தார். இந்தப் போட்டியில் 31 ஓவர்களில் இங்கிலாந்து அணி 11 சிக்ஸர்கள் அடித்து இருந்தது.
அயர்லாந்து அணியின் கிரைக் யங் மட்டுமே சிறப்பாக பந்து வீசி 7 ஓவர்களில் 31 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் சாய்த்து இருந்தார். ஜோஷ் லிட்டில் 5 ஓவர்களில் 69 ரன்கள் கொடுத்ததும், தியோ வான் வோர்க்கம் 4 ஓவர்களில் 47 ரன்கள் கொடுத்ததும் மோசமான பந்துவீச்சை பதிவு செய்தனர்.