லண்டன் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தவறான முடிவு ஒன்றை எடுத்து இருப்பதாக கிரிக்கெட் வல்லுநர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அப்போது வானம் மேகமூட்டத்துடன் இருப்பதாலும் ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்ற காரணத்தினாலும் தாங்கள் இந்த முடிவு எடுத்திருப்பதாக ரோகித் சர்மா கூறினார். மேலும் ஒரே ஒரு சுழற் பந்துவீச்சாளர் வைத்து தான் இந்திய அணி விளையாடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனால் உலகின் நம்பர் ஒன் வீரரான அஸ்வின் பிளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. இந்த நிலையில் இந்திய அணி பந்து வீசும் போது ஒரு மணி நேரம் வரை தான் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது. அதன் பிறகு சட்டென்று வானிலை மாறியது. ஒரு சொடக்கு போடும் நொடியில் வெயில் அடிக்க தொடங்கியது.
இதனால் ஆடுகளத்தில் இருந்த ஈரப்பதமும் சென்றுவிட்டது. இதன் மூலம் இந்திய அணி நான்கு வேகப்பந்துவீச்சாளர்களை வைத்து களமிறங்கியது தவறாக பார்க்கப்படுகிறது. சிராஜ், முஹம்மது ஷமி இருவரும் ஓரளவுக்கு நன்றாக பந்து வீசினர். ஷர்துல் தாக்கூர் கொஞ்சம் ரன்களை கட்டுப்படுத்தினாலும் தற்போது அவரும் தடுமாறி வருகிறார். உமேஷ் யாதவும் சொல்லவே தேவையில்லை. ஜடேஜா ஏழு ஓவர்களை வீசி 12 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார்.
ஆனால் ஷர்துல் தாக்கூர் 12 ஓவர்கள் வீசி 52 ரன்களும், உமேஷ் யாதவ் ஒன்பது ஓவர்களை வீசி 32 ரன்களையும் விட்டுக் கொடுத்திருக்கிறார்கள். இதனால் உமேஷ் யாதவ் அல்லது ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக அஸ்வினையாவது சேர்த்திருக்கலாம் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.மேலும் இங்கிலாந்தில் இது கோடை காலம் என்றும் அடுத்த நான்கு நாட்களுக்கு வெயில் தான் அடிக்கும் என்றும் வானிலை அறிக்கை தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனை கருத்தில் கொண்டு ரோகித் சர்மா அஸ்வினை சேர்த்திருந்தால் இந்நேரம் இடது கை பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் விக்கெட்டை வீழ்த்தி இருப்பார். ஆனால் தேநீர் இடைவேளையின் போது அவர் 75 பந்துகளில் 60 ரன்கள் குவித்திருக்கிறார். தற்போது ஆடுகளம் காயத் தொடங்கி இருப்பதால், அஸ்வின் ஜடேஜா கூட்டணி சிறப்பாக செயல்பட்டிருக்கும்.
இதனால் டாஸ் போடும்போது இருந்த வானிலையை நம்பி ரோகித் சர்மா ஏமாந்து விட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த முறை இங்கிலாந்தில் இறுதிப்போட்டியில் மழை பெய்த நிலையில் இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களை வைத்து இந்தியா தவறு செய்தது. ஆனால் வெயில் அடிக்கும் இந்த காலகட்டத்தில் இந்தியா ஒரு சுழற் பந்துவீச்சாளர் உடன் களமிறங்கி ஏமாந்து விட்டதாக ரசிகர்கள் சாடி வருகிறார்கள். ரோகித் சர்மாவின் இந்த தவறு போட்டியின் முடிவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த கூடும்.