ஐதராபாத்: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இருப்பினும் அந்த அணிக்காக தனி வீரராக போராடி 99 ரன்களை குவித்த ஷிகர் தவான், ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 14வது லீக் போட்டியில் ஐதராபாத் அணியை எதிர்த்து பஞ்சாப் அணி விளையாடியது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி 88 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது. இதனால் 100 ரன்களை கூட பஞ்சாப் அணி எடுக்காது என்று பார்க்கப்பட்டது. ஆனால் ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் நம்பிக்கையாக விளையாடி தனது அனுபவத்தை வெளிப்படுத்தினார் ஷிகர் தவான்.

11வதாக வந்த அறிமுகம் வீரர் மோகித் ரத்தேவை ஒருமுனையில் வைத்துக் கொண்டு ஷிகர் தவான் ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரியும், சிக்சருமாய் வெளுத்து வாங்கினார். கடைசி ஓவரில் 9 ரன்கள் அடித்தால் சதம் விளாசும் வாய்ப்பு ஏற்பட்ட நிலையில், ஒரு சிக்சர் மற்றும் 2 ரன்கள் ஓடி 69 பந்துகளில் 99 ரன்கள் எடுத்தார். அவரை சதம் அடிக்கவிடாமல் நடராஜன் சிறப்பாக பந்துவீசி இருப்பார். கடைசி வீரருடன் விளையாடியதால் ஏராளமான டாட் பால்கள் ஆடியும், ஷிகர் தவானின் ஸ்ட்ரைக் ரேட் 150 ஆக இருந்தது.
இதனைத் தொடர்ந்து ஐதராபாத் அணியின் த்ரிப்பாட்டி - மார்க்ரம் ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தால் பஞ்சாப் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இருப்பினும் ஆட்டநாயகனாக ஷிகர் தவான் தேர்வு செய்யப்பட்டார். வழக்கமாக வென்ற அணி வீரர்களுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்படும். ஆனால் தோல்வியடைந்த அணியில் இருந்த ஷிகர் தவான் பேட்டிங்கிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
அண்மையில் இந்திய ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் இருந்து நீக்கப்பட்ட ஷிகர் தவான், அதற்காக யாரையும் குற்றம்சாட்டவில்லை. ஷிகர் தவான் என்னும் குதிரையின் ஓட்டம் முடிந்துவிட்டதாக பலரும் கருதிய நிலையில், தனது ஓட்டத்தை நிறுத்தவில்லை என்று சொல்லும் வகையில் ஐபிஎல் தொடரில் பேட்ஸ்மேன்களுக்கு கிளாஸ் எடுத்து வருகிறார். அத்தனை இளம் வீரர்கள் ஆடும் ஐபிஎல் தொடரில், 3 போட்டிகளில் ஆடியுள்ள ஷிகர் தவான் 225 ரன்கள் விளாசி ஆரஞ்ச் கேப்பையும் பெற்று அசத்தியுள்ளார்.