டோமினிக்கா: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் தேர்வு செய்யப்படவில்லை என்றால் என்ன செய்யலாம் என்று யோசித்து மனரீதியாக தயாராக இருந்ததாக ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் விராட் கோலிக்கு நிகரான அனுபவம் வாய்ந்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின். 2011ஆம் ஆண்டு முதல் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்ட அனைத்து தொடர்களிலும் விளையாடிய அனுபவம் கொண்டவர். அதேபோல் இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட மைதானங்களில் எப்படி பந்துவீச வேண்டும் என்று அனுபவ ரீதியாக அறிந்த ஒரே இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் தான். அப்படியான ஒரு வீரரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி கழற்றிவிட்டது.

இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ரவிச்சந்திரன் அஸ்வின் இல்லாததால், ஆஸ்திரேலியா அணி எளிதாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மரண மாஸ் கம்பேக்கை நிகழ்த்தி காட்டியுள்ளார். இதன் மூலம் பல்வேறு சாதனைகள் படைத்துள்ள அஸ்வின், இந்திய அணிக்கும் கேப்டன் ரோகித் சர்மாவுக்கும் தனது முக்கியத்துவத்தை நிரூபித்துள்ளார்.
இந்த நிலையில் முதல் நாள் ஆட்டத்திற்கு பின் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசுகையில், வாழ்க்கையிலும் சரி கிரிக்கெட்டிலும் சரி ஒவ்வொரு மனிதரும் பல்வேறு ஏற்றங்களையும், இறக்கங்களையும் சந்தித்திருப்பார்கள். சில நேரங்களில் தோல்விகளை சந்திக்கும் போது தான் நமக்கு சில வாய்ப்புகள் உருவாகும். அப்போது நாம் யாரை வேண்டுமானாலும் குற்றம்சாட்டலாம். ஆனால் அதிலிருந்து என்ன கற்கிறோம் என்பதே என்னை பொறுத்தவரை முக்கியம். தோல்விகளில் இருந்து தான் எனது தவறுகளை திருத்திக் கொள்கிறேன்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அடைந்த தோல்வி நிச்சயம் வருத்தமளிக்கிறது. ஏனென்றால் ஒருமுறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியும், எங்களால் வெற்றிபெற முடியவில்லை. அதனால் 2025ஆம் ஆண்டு பயணத்தை சிறப்பாக தொடங்க வேண்டும் என்று நினைத்தேன். அதேபோல் இறுதிப்போட்டிக்கான பிளேயிங் லெவனில் தேர்வு செய்யப்படாததற்கு வருத்தமடையவில்லை. இன்னும் சொல்லப்போனால், பிளேயிங் லெவனில் தேர்வு செய்யப்படவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி யோசித்து மனரீதியாக தயாராக இருந்தேன் என்று தெரிவித்துள்ளார்.