மும்பை: அயர்லாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படாமல் ருதுராஜ் கெய்க்வாட் தேர்வு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு பின், இந்திய அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. ஏற்கனவே அயர்லாந்து அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பும்ரா தலைமையில் இந்திய அணியும் நேற்றிரவு அறிவிக்கப்பட்டது. சர்வதேச கிரிக்கெட் களத்திற்கு 11 மாதங்களுக்கு பின் நட்சத்திர வீரர் பும்ரா திரும்பவுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் முதல்முறையாக டி20 கேப்டன்சி பதவியையும் பும்ரா ஏற்றுள்ளார். அதேபோல் சென்னை அணியின் நட்சத்திர வீரர் ருதுராஜ் கெய்க்வாட் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே ருதுரஜ் கெய்க்வாட், ஏசியன் கேம்ஸில் பங்கேற்க உள்ள இந்திய அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் மீண்டும் அவர் மற்றொரு தொடரில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, அயர்லாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சஞ்சு சாம்சனும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2015ஆம் ஆண்டு முதலே இந்திய அணி செட் அப்பில் உள்ள சஞ்சு சாம்சன், இதுவரை 17 டி20 போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்டவர். அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியை 3 சீசன்களாக வழிநடத்தியவர். அதில் ஏராளமான சீனியர் வீரர்களை பக்குவமாக பயன்படுத்தி, ஒருமுறை இறுதிப் போட்டிக்கும் முன்னேறியவர்.

நியாயமாக பார்த்தால் சஞ்சு சாம்சன் தான் இந்திய அணியின் துணை கேப்டனாக நியமனம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் மும்பையைச் சேர்ந்த ருதுராஜ் கெய்க்வாட் துணை கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சஞ்சு சாம்சனை பிசிசிஐ விரும்பவில்லை என்றும், சஞ்சு சாம்சனை போல் கடந்த 8 ஆண்டுகளில் ஒரு வீரர் புறந்தள்ளப்பட்டதில்லை என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.