மும்பை: குடிப்பழக்கத்தை காரணமாக வைத்து வேண்டுமென்றே சிலர் என்னை பற்றி தவறாக வதந்திகளை பரப்பி வருவதாக இந்திய முன்னாள் வீரர் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர வீரராக வலம் வந்தவர் பிரவீன் குமார். 2008ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை இந்திய அணி பிரதான பவுலர்களில் ஒருவராக வலம் வந்தவர். கட்டர்ஸ் மற்றும் ஸ்விங் மூலமாக விக்கெட்டுகளை கைப்பற்றி வந்த அவர், தோனியின் ஆஸ்தான பவுலர்களில் ஒருவராக இருந்தார். 68 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 77 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட்டில் 27 விக்கெட்டுகளையும், டி20 கிரிக்கெட்டில் 8 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார். ஒட்டுமொத்தமாக 112 விக்கெட்டுகளை இந்திய அணிக்காக வீழ்த்தியுள்ள அவர், 2018ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். அதன்பின் பிரவீன் குமார் என்ன செய்கிறார் என்பது குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் பிரவீன் குமார் அளித்து பேட்டியில் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசியுள்ளார். அதில், நான் முதல்முறையாக இந்திய அணியுடன் இணைந்த போது, சில சீனியர் வீரர்கள் குடிப் பழக்கத்தை நிறுத்தி கொள் என்று அறிவுறுத்தியதோடு, மற்ற சில தவறான பழக்கத்தையும் தவிர்த்துவிடு என்று அட்வைஸ் கொடுத்தார்கள். இந்திய அணியின் அனைத்து வீரர்களும் குடித்தனர். ஆனாலும் எனது பெயர் மட்டும் கேவலப்படுத்தப்பட்டது.
சீனியர் வீரர்கள் பலரும் என்னை இளம் வீரர் என்று சிறப்பாக நடத்தினர். ஆனால் சிலர் மட்டும் என்னை பற்றி தவறாக பரப்பினார்கள். கேமராவுக்கு முன்பாக நான் அவரின் பெயரை கூற விரும்பவில்லை. ஆனால் என்னை பற்றி தவறாக பேசியவர் யார் என்று அனைவருக்கும் தெரியும். 2018ஆம் ஆண்டு ஐபிஎல் அணி ஒன்று என்னை பவுலிங் பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்வார்கள் என்று எதிர்பார்த்தேன். அதேபோல் எனது சொந்த மாநில அணியான உத்தரப் பிரதேச அணி கூட யாரும் பேசுவதில்லை.
இவையனைத்திற்கும் நான் குடிப்பது தான் காரணமாக அமைந்தது. நான் ஒருநாளும் மைதானத்திலோ அல்லது ஓய்வறையிலோ குடித்ததில்லை. இதுவே எனக்கு துயரத்தை கொடுத்தது. சில நேரங்களில் வெறுமனே ஃபேனை மட்டுமே பார்த்து கொண்டே பார்த்து கொண்டிருப்பேன். எனக்கு ஒருவர் கூட அழைத்து பேசாதது தான் சோகமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.