பெங்களூரு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வெளிநாட்டு வீரர் டேவிட் வில்லி காயம் காரணமாக விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக மாற்று வீரராக சென்னை அணியின் முன்னாள் வீரர் கேதர் ஜாதவ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 43வது லீக் போட்டியில் லக்னோ அணியை எதிர்த்து பெங்களூரு அணி விளையாடவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் லக்னோவில் இன்று காலை முதல் மழையும் பெய்து வருகிறது. இதனால் ஆட்டம் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் பெங்களூரு அணியின் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
தற்போது பெங்களூரு அணி சார்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி அந்த அணியின் ரசிகர்களை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆர்சிபி அணியின் நட்சத்திர வெளிநாட்டு ஆல் ரவுண்டரான டேவிட் வில்லி காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். ஏற்கனவே டாப்லீ வெளியேறிய நிலையில், அவரது இடத்தில் டேவிட் வில்லி ஆடி வந்தார். தற்போது அவர் காயம் காரணமாக விலகியுள்ளார்.

டேவிட் வில்லி விலகியது கூட ஓரளவுக்கு ஆர்சிபி ரசிகர்களுக்கு சோகம் என்றாலும், அவருக்கு பதில் மாற்று வீரராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள வீரரால் தான் சோகத்தில் உச்சிக்கு ஆர்சிபி ரசிகர்கள் சென்றுள்ளனர். சென்னை அணிக்காக ஆடிய அனுபவ வீரர் கேதர் ஜாதவை தான் ஆர்சிபி அணி மாற்று வீரராக ஒப்பந்தம் செய்துள்ளது. சென்னை அணிக்காக மறக்க முடியாத ஒரு ஆட்டத்தை கேதர் ஜாதவ் ஃபினிஷ் செய்து கொடுத்துள்ளார்.
இருப்பினும் கடந்த மூன்று சீசன்களில் கேதர் ஜாதவ் பெரியளவில் ஃபார்மில் இல்லை. சென்னை அணிக்காக ஆடிய மோசமான ஆட்டம் ஒருபுறம் இருந்தாலும், அவரை நம்பிக்கை வைத்து ஏலத்தில் வாங்கிய ஐதராபாத் அணிக்காகவும் அவர் சிறப்பாக விளையாடவில்லை. அண்மை காலமாக உள்ளூர் கிரிக்கெட்டில் நல்ல ஃபார்மில் விளையாடி வருகிறார்.
அதேபோல் பெங்களூரு அணிக்கு கோலி, டூ பிளஸிஸ் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் கடந்து மிடில் ஆர்டரில் எந்த வீரரும் பெரியளவில் ரன்கள் சேர்க்கவில்லை. இதனால் மிடில் ஆர்டரை பலப்படுத்தும் நோக்கில் கேதர் ஜாதவை ஆர்சிபி அணி ஒப்பந்தம் செய்துள்ளது. ஆர்சிபி அணிக்காக ஏற்கனவே கேதர் ஜாதவ் விளையாடியுள்ளார். இன்னும் சொல்லப் போனால் ஆர்சிபி அணிக்காக மிடில் ஆர்டரில் செய்த சம்பவங்களை பார்த்துதான் சென்னை அணி அவரை வாங்கியது.
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மராத்தி மொழிக்காக ஜியோ சினிமாவில் செயலியில் வர்ணனையாளராக கேதார் ஜாதவ் செய்து வந்தார். தற்போது மீண்டும் ஆர்சிபி அணிக்காக கேதர் ஜாதவ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், அவரது ஃபார்ம் எப்படி உள்ளது என்ற கேள்வியும், சந்தேகமும் எழுந்துள்ளது. ஏற்கனவே ரஹானே, சந்தீப் சர்மா என்று பல்வேறு அணிகளால் புறக்கணிக்கப்பட்ட வீரர்கள் சிறப்பாக ஆடிவரும் சூழலில், கேதர் ஜாதவும் அதுபோல் சிறப்பான சம்பவம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.