வாயில என்ன கொழுக்கட்டையாப்பா வச்சிருந்த... ஜடேஜா மீது பாயும் டோணி
கான்பெரா: நாம நல்லா பேட்டிங் பண்ணுனா மட்டும்போதாது, எதிர்முனையில் நிற்கும் இளம் வீரர்களையும் வழி நடத்த வேண்டும் என்று ரவீந்திர ஜடேஜாவுக்கு குட்டு வைத்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மகேந்திரசிங் டோணி.
கான்பெராவில் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
37.2 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 277 ரன்கள் குவித்து தனது இலக்கான 349 ரன்களை நோக்கி ஜோராக முன்னேறிக்கொண்டிருந்த இந்திய அணி, மேற்கொண்டு, 46 ரன்கள் எடுப்பதற்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த சோகம் நேற்று அரங்கேறியது.

டோணி டக்-அவுட்
செஞ்சுரி அடித்த தவான் அவுட்டானதும், களத்திற்கு வந்த டோணி, மறுமுனையில் செஞ்சுரி போட்டு அட்டகாசமாக ஆடிக்கொண்டிருந்த கோஹ்லிக்கு பார்ட்னர்ஷிப் கொடுக்காமல், மோசமான ஒரு ஷாட் மூலம் 3 பந்துகளில் டக்-அவுட் ஆனார். இந்த விக்கெட் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

பழியேற்ற டோணி
டோணிக்கு பிறகு வந்த வீரர்கள் வரிசையாக நடையை கட்ட, கோஹ்லியும், வெளியேற இந்தியா பரிதாப தோல்வியை சந்தித்தது. எனவேதான், தோல்விக்கான பொறுப்பை தானே ஏற்பதாக டோணி நேற்று போட்டி முடிந்த பிறகு அறிவித்துக்கொண்டார்.

வாய் திறக்கவில்லையே
ஒருபக்கம் குர்கீரத்சிங், ரிஷிதவான் போன்ற அனுபவமில்லா வீரர்களின் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில், அனுபவ வீரர் ரவீந்திர ஜடேஜா பந்து எண்ணிக்கைக்கு ஏற்ப ரன் எடுத்துக்கொண்டுதான் இருந்தார். ஆனால், எதிர்முனையில் களமிறங்கும் பேட்ஸ்மேன்களிடம் அவர் பேசவேயில்லை.

நாட்-அவுட்டா நின்று என்ன பயன்
இந்தியா 49.2 ஓவர்களில் 323 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனபோது, 27 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஜடேஜா நாட்-அவுட்டாக நின்றுகொண்டிருந்தார். இதுகுறித்து டோணி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

பேசுங்கப்பா
டோணி கூறுகையில், 100 போட்டிகளுக்கும் மேல் விளையாடி அனுபவம் உள்ள ஜடேஜா எதிர்முனையிலுள்ள வீரர்களிடம் அடிக்கடி கருத்துப்பரிமாற்றம் செய்திருக்க வேண்டும். அனுபவ பேட்ஸ்மேன்கள் அவர்கள் மட்டும் சிறப்பாக பேட் செய்வதோடு நிறுத்தக்கூடாது. இந்த நேரத்தில் நீங்கள் செய்ய வேண்டியது என்ன? பந்து வீச்சாளர் எந்த மாதிரி பந்து போடுவார்? என்பது குறித்த ஐடியாக்களை ஜடேஜா ஷேர் செய்திருக்க வேண்டும். இருப்பினும் ஜடேஜா அதிகமாக பேசக்கூடிய வீரர் கிடையாது என்பதையும் நான் உணர்ந்துள்ளேன். இவ்வாறு டோணி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications