மும்பை: இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் எப்படி வேகப்பந்துவீச்சாளர் மார்க் வுட்டை பயன்படுத்தி வருகிறதோ, அதேபோல் இந்திய அணியும் உம்ரான் மாலிக்கை பயன்படுத்த வேண்டும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆஷஸ் தொடரின் முதல் இரு போட்டிகளையும் ஆஸ்திரேலிய அணி வென்று 2-0 என்று கணக்கில் முன்னிலையில் இருந்தது. ஆனால் ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் வென்று இங்கிலாந்து அணி பதிலடி கொடுத்துள்ளது. இதற்கு இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் மார்க் வுட் முக்கியக் காரணமாக அமைந்துள்ளார்.

பேஸ் பால் திட்டத்திற்கு ஏற்ப பிளாட் பிட்ச்களை தயாரிக்கப்படுவதால், இங்கிலாந்து அணியின் பவுலிங் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களிடம் செல்லுபடியாகவில்லை. இதனால் இங்கிலாந்து அணி ஸ்விங் செய்யக் கூடிய பந்துவீச்சாளரையும் விடவும் அதிவேகத்தை பந்தை வீசும் வேகப்பந்துவீச்சாளர் தேவையாக இருந்தார். அதற்கேற்ப இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ஆண்டர்சனுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, மார்க் வுட்டை கொண்டு வந்தார்.
3வது டெஸ்ட் போட்டியில் மார்க் வுட் வீசிய ஒவ்வொரு பந்தில் 148கிமீ வேகத்தில் இருந்த குறையவில்லை. இதன் காரணமாக முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளையும், 2வது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார். அதுமட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் 40 ரன்கள் சேர்க்க, ஆட்டநாயகன் விருதையும் மார்க் வுட் தட்டிச் சென்றார்.
கிட்டத்தட்ட மார்க் வுட் வேகத்திற்கு வீசக்கூடிய பந்துவீச்சாளர் தான் உம்ரான் மாலிக். மணிக்கு 150 கிமீ வேகத்தில் எளிதாக வீசும் வல்லமை கொண்ட உம்ரான் மாலிக், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் உம்ரான் மாலிக்கின் களம் டெஸ்ட் கிரிக்கெட் என்று முன்னாள் வீரர்கள் பலரும் அறிவுறுத்தி வருகின்றனர்.
இருப்பினும் உம்ரான் மாலிக் இதுவரை இந்திய டெஸ்ட் அணியில் சேர்க்கப்படவில்லை. தற்போது இங்கிலாந்து அணி அதிவேக பந்துவீச்சாளரான மார்க் வுட்டை வைத்து பிளாட் டிராக்கில் எப்படி விளையாட வேண்டும் என்று நிரூபித்துள்ளது. அதேபோல் இந்திய கேப்டன் ரோகித் சர்மா, உம்ரான் மாலிக்கை பயன்படுத்த வேண்டும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.