மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் கே எல் ராகுல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்து விட்டதாக சமூக வலைதளங்களில் பரபரப்பு எழுந்துள்ளது. இது குறித்து ரசிகர்கள் பலரும் கூகுளில் தேடி வருகின்றனர். இது குறித்த உண்மை என்ன? உண்மையில் கே எல் ராகுல் வெளியிட்ட பதிவு என்ன? என்று பார்க்கலாம்.
நேற்று முன்தினம் கே எல் ராகுல் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், "நான் விரைவில் ஒரு அறிவிப்பை வெளியிடப் போகிறேன். காத்திருங்கள்" எனக் குறிப்பிட்டு இருந்தார். இதை அடுத்து சமூக வலைதளங்களில் அவர் என்ன சொல்லப் போகிறார்? என்ற எதிர்பார்ப்பு பெரிய விவாதமாக மாறியது.

இதனிடையே சில விஷமிகள் கே எல் ராகுல் வெளியிட்டது போன்ற ஒரு பதிவை வெளியிட்டனர். அதில் கே எல் ராகுல் தனது ஓய்வு அறிவிப்பை பற்றி பகிர்வது போன்ற வாசகங்களை இடம் பெறச் செய்தனர். அதை பார்த்த ரசிகர்கள் பலரும் கே எல் ராகுல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டாரா? என அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் பலரும் கூகுளில் இது குறித்து தேடத் துவங்கினர். ஆனால், கே எல் ராகுலின் ஓய்வு அறிவிப்பு பதிவு போலியானது என பின்னர் தெரிய வந்தது. வேறு ஒரு வீரர் வெளியிட்ட ஓய்வு அறிவிப்பின் பதிவை அப்படியே எடுத்துக் கொண்டு, அந்த வீரரின் பெயரை மாற்றி கே எல் ராகுல் பெயர் மற்றும் புகைப்படத்தை இடம் பெறச் செய்துள்ளனர். அதனால், கே எல் ராகுல் ஓய்வு பெற்று விட்டதாக பலரும் நினைத்தனர். ஆனால், ராகுல் ஓய்வு அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.

கே எல் ராகுல் முதலில் வெளியிட்ட பதிவு குறித்து இதுவரை எந்த தகவலையும் அறிவிக்கவில்லை. அவர் என்ன அறிவிப்பை வெளியிடப் போகிறார் என்பது இதுவரை தெரியவில்லை. ஆனால், அவரது ஓய்வு அறிவிப்பு போலியானது என்பது நிரூபணம் ஆகி உள்ளது. விரைவில் அறிவிப்பை வெளியிடப் போகிறேன் என ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டுவதற்கு பதிலாக அவர் நேரடியாகவே தனது அறிவிப்பை வெளியிட்டால் இதுபோன்ற வதந்திகளை ராகுல் தவிர்த்து இருக்கலாம்.
கே எல் ராகுல் அடுத்து உள்ளூர் டெஸ்ட் தொடரான துலீப் டிராபி தொடரில் பங்கேற்க உள்ளார். அதன் பின் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அவர் விளையாட இருக்கிறார்.