மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்றைய முக்கிய லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தியது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி , புள்ளி பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறும்.
இந்த நிலையில், மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ரோகித் சர்மா, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து தொடக்க வீரராக களமிறங்கிய விராட் கோலி 1 ரன்னில் வெளியேறினார்.

இதே போன்று அனுஜ் ராவத் 6 ரன்களில் வெளியேற, ஆர்சிபி அணி 16 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மேக்ஸ்வெல் மற்றும் டுபிளசிஸ், கவுண்டர் அட்டாக் இன்னிங்ஸ் விளையாடி மும்பைக்கு நெருக்கடி கொடுத்தனர். டுபிளசிஸ் ரன் ஏதும் எடுக்காத நிலையில், கொடுத்த கேட்ச் வாய்ப்பை, மும்பை வீரர்கள் தவறவிட்டனர்.
இந்த ஜோடி பவுண்டரிகளையும், சிக்சர்களையும் பறக்கவிட்டனர். இந்த ஜோடி மட்டும் 7 சிக்சரும், 13 பவுண்டரிகள் அடங்கும். மேக்ஸ்வெல் 33 பந்துகளில் 68 ரன்கள் சேர்க்க, டுபிளசிஸ் 41 பந்துகளில் 65 ரன்கள் சேர்த்தனர். இவர்கள் இருவரும் முக்கிய கட்டத்தில் ஆட்டமிழக்க, லோம்ரர் 1 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில் தினேஷ் கார்த்திக் 18 பந்தில் 30 ரன்கள் எடுக்க, ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்தது. இன்றைய ஆட்டத்தில் மும்பை அணியில் திலக் வர்மா இல்லாதது பின்னடைவாக கருதப்பட்டாலும், கேப்டன் ரோகித் அணியை காப்பாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டது.