குடும்பத்தினர் நேரம்
இந்திய அணியில் குறிப்பிட்ட சில வீரர்கள் வெளிநாட்டு தொடர்களுக்கு தங்கள் மனைவிகளையும் அழைத்துச் செல்வர். தவான், தோனி, ரோஹித், கோலி ஆகியோர் இதில் முதன்மையானவர்கள். எப்போது கிரிக்கெட் தொடர் நடந்தாலும், இவர்களின் மனைவிகள் பார்வையாளர்கள் பகுதியில் இருப்பார்கள்.
உலகக்கோப்பையில் என்ன நடந்தது?
அதே போல, உலகக்கோப்பை தொடரிலும் நடந்தது. ஆனால், குடும்பத்தினரை எப்போது உடன் வைத்துக் கொள்ளலாம் என்பதற்கு பிசிசிஐ ஒரு விதியை வகுத்துள்ளது. அதை மீறி ரோஹித் சர்மா உலகக்கோப்பை தொடர் முழுவதும் தன் குடும்பத்தினரை தன்னுடன் வைத்துக் கொண்டார் என்று கூறப்படுகிறது.
துவங்கிய உரசல்
அப்போது விராட் கோலி - ரோஹித் சர்மா இடையே உரசல் எழுந்துள்ளது. அனேகமாக கோலி, விதிமுறையை சுட்டிக் காட்டி குடும்பதினரை குறிப்பிட்ட நாட்களுக்கு பின்னரே அனுமதிக்க முடியும் என கூறி இருக்கலாம். அது தான் பிரச்சனையின் துவக்கம் என்கிறார்கள்.
தனியே கிளம்பிய ரோஹித்
உலகக்கோப்பை முடிந்த பின் கூட ரோஹித் சர்மா, மற்ற வீரர்களுக்கு முன்பு, தனியே தன் குடும்பத்தினருடன் இந்தியா திரும்பினார். அதன் பின்பு தான் ரோஹித் - கோலி உரசல் குறித்த செய்திகள் வெளியாகின.
விசாரணை இல்லை
ரோஹித் சர்மா விதிமீறல் செய்ததை பிசிசிஐ விசாரிக்கும் என்றார்கள். அதே போல, ரோஹித் சர்மா- கோலி மோதல் குறித்தும் விசாரணை நடைபெறும் என கூறப்பட்டது. ஆனால், எந்த விசாரணையும் இதுவரை நடைபெறவில்லை. மூத்த பிசிசிஐ அதிகாரிகள் எந்த பிரச்சனையும் இல்லை. எல்லாமே கட்டுக்கதை என திட்டவட்டமாக மறுத்து வருகிறார்கள்.
பிசிசிஐ விதியில் மாற்றம்
இதற்கிடையே சமீபத்தில் பிசிசிஐ குடும்பத்தினர் பார்வையிடும் நேரம் குறித்த விதியில் செய்துள்ள திருத்தும் மேலும் சிக்கலை உண்டாக்கி இருக்கிறது. அந்த புதிய மாற்றத்தின்படி கேப்டன் மற்றும் பயிற்சியாளர், வீரர்கள் தங்கள் குடும்பத்தினரை சந்திக்க அனுமதிக்கவோ, மறுக்கவோ முடியும்.
கட்டுப்படுத்துகிறாரா கோலி?
கேப்டன் கோலி வீரர்கள் தங்கள் குடும்பத்தினரை சந்திக்கும் நேரங்களில் கட்டுப்பாட்டை விதிக்கிறாரா? அல்லது கட்டுப்பாட்டை தளர்த்த நினைக்கிறாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது, மறுபுறம், இவ்வளவு விஷயம் தெரிந்தும் பிசிசிஐ அமைதியாக இருப்பது அதிர்ச்சியாக உள்ளது. ரோஹித் - கோலி மோதலில் வெளியாகும் பல தகவல்கள் பிசிசிஐ அதிகாரிகள் மூலம் தான் வெளியாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.