அகமதாபாத்: குஜராத் - சென்னை அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி ரிசர்வ் நாளிற்கு மாற்றப்பட்டுள்ளது சிஎஸ்கே ரசிகர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 31ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் தொடங்கியது. தொடர்ந்து நடைபெற்ற லீக் போட்டிகளுக்கு பின், பிளே ஆப் சுற்றுக்கு குஜராத், சென்னை, லக்னோ மற்றும் மும்பை அணிகள் முன்னேறின. இதில் மும்பை மற்றும் லக்னோ அணிகள் தோல்வியடைந்த வெளியேற, இறுதிப்போட்டிக்கு குஜராத் - சென்னை அணிகள் முன்னேறின. இந்த நிலையில் அகமதாபாத் மைதானத்தில் 6.30 மணிக்கு தொடங்கிய மழை, ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் கண்ணாமூச்சி ஆடியது.

இறுதியாக 11 மணி வரையிலும் கனமழை நிற்காததால், ஆட்டம் நாளை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை அணி ரசிகர்கள் பீதியடைந்துள்ளனர். இந்தப் போட்டி சென்னை அணியின் கேப்டன் எம்எஸ் தோனி விளையாடும் கடைசி ஐபிஎல் போட்டியாக பார்க்கப்படுகிறது. இதுவரை ஓய்வு பற்றி முடிவு செய்யவில்லை என்றாலும், மீண்டும் சென்னை அணி கேப்டனாக ஆடமாட்டார் என்றே பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் மழை காரணமாக ஆட்டம் நாளை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 2019ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பையின் அரையிறுதி ஆட்டமும் இதேபோல் மழை காரணமாக இரு நாட்களாக நடைபெற்றது. அந்தப் போட்டியில் தோனி கடைசி வரை போராடி திடீரென ரன் அவுட்டானதால், இந்திய அணி தோல்வியடைந்தது. சர்வதேச கிரிக்கெட்டில் அந்தப் போட்டியே தோனிக்கு கடைசி போட்டியாகவும் அமைந்தது.
தற்போது அதேபோல் தோனி ஆடும் கடைசி ஐபிஎல் தொடராக பார்க்கப்படுவதால், மீண்டும் இறுதிப்போட்டி ரிசர்வ் நாளிற்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் சென்னை அணியும் தோல்வியடையும் என்று சிஎஸ்கே ரசிகர்கள் அச்சமடைந்துள்ளனர். இந்திய அணி எப்படி தோனிக்கு இறுதி மரியாதை கொடுக்க முடியவில்லையோ, அதேபோல் சிஎஸ்கே வீரர்கள் செயல்பட வாய்ப்புள்ளதாக ரசிகர்களிடையே அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது.