ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் பும்ரா தொடரிலிருந்து விலகி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பும்ரா கடந்த 11 மாதத்திற்கு பிறகு காயத்திலிருந்து திரும்பி அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் களமிறங்கினார்.
இந்த நிலையில் ஆசிய கோப்பை தொடர்களில் பும்ராவின் செயல்பாடு தான் இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருக்கும் என ரசிகர்கள் நம்பியிருந்தனர்.

இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் லீக் ஆட்டத்தில் இந்திய அணி 266 ரன்கள் எடுத்திருந்தது. இதனை அடுத்து பும்ரா எப்படி செயல்பட போகிறார் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இதனால் பும்ராவின் பந்துவீச்சை பார்க்க காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்த நிலையில் வாழ்வா சாவா ஆட்டத்தில் இந்தியா நேபாளத்தை எதிர்கொள்கிறது.
இதில் இந்தியா வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு செல்ல முடியும். இந்த நிலையில் பும்ரா நேற்று இந்திய அணியில் இருந்து விலகி தாய்நாடு திரும்பினார். தன்னுடைய மனைவி சஞ்சனாவின் பிரசவத்திற்காக பும்ரா தாயகம் திரும்பினார். இது ரசிகர்களை கோபமடைய செய்திருக்கிறது.
2015 உலகக் கோப்பை தொடருக்கு முன்பு இந்திய அணியின் கேப்டனாக இருந்த தோனி தன்னுடைய மகள் பிறக்கும் தருணத்தில் மனைவியுடன் இந்தியாவில் இருக்காமல் தான் ஆஸ்திரேலியாவில் தங்கி தன்னுடைய பணிகளை மேற்கொண்டார். தமது மனைவியின் பிரசவத்தை விட தாய் நாட்டுக்காக விளையாடுவது தான் முக்கியம் என அப்போது தோனி முடிவெடுத்தார். ஆனால் பும்ரா தற்போது ஆசிய கோப்பை போன்ற முக்கிய தொடரில் கூட விளையாடாமல் பாதியில் சென்றது ரசிகர்களை கோபமடைய செய்திருக்கிறது.
இதே போல் கடந்த 2021 ஆம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலிய தொடரில் பங்கேற்றபோது அப்போதைய கேப்டன் விராட் கோலி தன்னுடைய மனைவி பிரசவத்திற்காக அந்த தொடரில் இருந்து பாதியில் விலகி மீண்டும் வரவே இல்லை. தற்போது அதே பாணியில் பும்ராவும் செய்வதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.100 கோடி மக்கள் நம்பி இருக்கும் நிலையில் தங்களுடைய சொந்த பந்தத்திற்காக வீரர்கள் பாதியில் செல்வது சரியல்ல என்றும் ரசிகர்கள் கடுமையாக சாடி வருகிறார்கள்.