மும்பை: இந்திய அணியின் மூத்த வீரரான இஷாந்த் சர்மா வயது மூப்பு காரணமாக ஓரம் கட்டப்பட்ட நிலையில், அவரை விட அதிக வயதுடன் விளையாடி வரும் கேப்டன் ரோகித் சர்மாவை டெஸ்ட் அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. இதற்கு இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோகித் சர்மா, புஜாரா மற்றும் விராட் கோலி ஆகியோரின் பொறுப்பில்லாத ஆட்டமே காரணமாக பார்க்கப்படுகிறது. அதேபோல் அஸ்வினை சேர்க்காதது, இஷாந்த் சர்மாவை வயதை காரணம் காட்டி தேர்வு செய்யாமல் கழற்றிவிட்டது உள்ளிட்டவை இந்திய அணியின் தோல்விக்கு மறைமுக காரணமாக அமைந்துள்ளன.
இத்தனைக்கும் இந்திய கேப்டன் ரோகித் சர்மா 36 வயதில் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் விளையாடி வரும் நிலையில், வெளிநாடுகளில் சிறப்பாக பந்துவீசும் இஷாந்த் சர்மா 34 வயதிலேயே அணியில் இருந்து ஓரம்கட்டப்பட்டுள்ளார். இதற்கான காரணம் என்ன என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். பும்ரா இல்லாத போது வெளிநாடுகளில் சிறப்பாக செயல்படும் மூத்த வீரரான இஷாந்த் சர்மாவை இந்திய அணி தேர்வு செய்யாமல் புறக்கணித்துள்ளது.

இதனால் இந்திய டெஸ்ட் அணியில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. குறிப்பாக நீண்ட நாட்களாக மோசமாக ஆடி வரும் புஜாரா, உமேஷ் யாதவ், ரோகித் சர்மா ஆகியோருக்கு பதிலாக மாற்று வீரர்களை உருவாக்க வேண்டும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
எப்படி டி20 உலகக்கோப்பை தோல்விக்கு பின் ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்திய அணி உருவாக்கப்பட்டு மாற்றமடைந்து வருகிறதோ, அதேபோல் ரஞ்சி டிராவில் சிறப்பாக ஆடும் இளம் வீரர்களுக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக டாப் ஆர்டரில் இடதுகை பேட்ஸ்மேன்களின் எழுந்துள்ளதால், யஷஸ்வி ஜெய்ஸ்வால் உள்ளிட்ட இளம் வீரர்களை டெஸ்ட் அணி பரிசோதனை முயற்சியாக தேர்வு செய்து வாய்ப்பு வழங்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.