மும்பை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு துணை கேப்டன் பதவி மறுக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணி வரும் 12ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ்-க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. டெஸ்ட் போட்டிக்கு ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு பின் சீனியர் வீரர்கள் நீக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்பட்டது. ஆனால் புஜாரா மட்டுமே நீக்கப்பட்டுள்ளார்.

அதேபோல் 18 மாதங்களுக்கு பின் இந்திய அணிக்காக களமிறங்கிய அஜிங்கியா ரஹானேவுக்கு துணை கேப்டன் பதவி அளிக்கப்பட்டுள்ளது. பார்டர் - கவாஸ்கர் டிராபி தொடரில் மோசமாக ஆடிய கேஎல் ராகுலிடம் இருந்து துணை கேப்டன் பதவி பறிக்கப்பட்ட பின், வேறு யாரும் துணை கேப்டனாக நியமிக்கப்படவில்லை. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் மீண்டும் அஸ்வினுக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்படாமல் ரஹானேவுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணிக்காக நீண்ட காலமாக ஆடி வரும் ரவிச்சந்திரன் அஸ்வின், அனைத்து ஆடுகளங்களிலும் அனைத்து நாடுகளிலும் தன்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்று நிரூபித்து காட்டியவர். அதுமட்டுமல்லாமல் ஐசிசி தரவரிசையில் முதலிடத்தில் உள்ளவர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் அஸ்வினை தேர்வு செய்யாததே இந்திய அணி தோல்வியடைய காரணமாக அமைந்தது.
கேப்டன்சிக்கான அனைத்து திறமைகளும், அனுபவமும் இருந்து அஸ்வினை துணை கேப்டனாக நியமிக்காமல் பிசிசிஐ புறக்கணித்து வருகிறது. 36 வயதை அஸ்வின் எட்டியிருந்தாலும், அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதிப்போட்டி வரை தாராளமாக இந்திய அணிக்காக விளையாடக் கூடியவர். இன்னும் சொல்லப் போனால், இங்கிலாந்து அணி ஆண்டர்சனை எப்படி 41 வயதிலும் பயன்படுத்தி வருகிறதோ, அதுபோல் அஸ்வினை உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இருப்பினும் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு துணை கேப்டன் பதவி மறுக்கப்பட்டிள்ளது. இந்திய அணியின் துணை கேப்டனாக செயல்பட்டுள்ள புஜாரா, கேஎல் ராகுல், பும்ரா, ரஹானே அனைவரும் அஸ்வினுக்கு பின்னரே டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாட தொடங்கினர். அஸ்வினை உள்நாட்டு போட்டிகளுக்கு கேப்டனாக நியமித்து, ரிஷப் பந்த் உள்ளிட்டோரை அடுத்த கேப்டனாக கொண்டு வரும் முடிவை பிசிசிஐ எடுக்கும் என்று பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் ரஹானேவை துணை கேப்டனாக நியமித்து அதிர்ச்சியை கொடுத்துள்ளது.