கொல்கத்தா: ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஜெய்ஸ்வாலின் அதிரடியான ஆட்டத்தை ஒப்பிட்டு, இளம் வீரர் ரியான் பராக்கின் பேட்டிங்கை ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரியான் பார்க். நடப்பு ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக ரியான் பராக் ஒரே ஓவரில் 4 சிக்சர்கள் விளாசுவேன் என்று ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இளம் வீரரான ரியான் பராக் நம்பிக்கையுடன் பதிவிட்டது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இதனால் ரியான் பராக் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஆனால் நடப்பு ஐபிஎல் தொடரில் ரியான் பராக்கிற்கு போதுமான வாய்ப்புகள் கிடைத்தும் அதனை அவர் பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால் ராஜஸ்தான் அணியின் மற்றொரு இளம் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் அதிரடியான ஆட்டம் ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை அணிக்கு எதிராக சதம், கொல்கத்தா அணிக்கு எதிராக அதிவேக அரைசதம் என்று இந்திய அணி ஜெர்சியை அணிய ஜெய்ஸ்வால் தயாராகி வருகிறார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் மட்டும் 12 போட்டிகளில் விளையாடி சுமார் 500 ரன்களுக்கும் மேலாக விளாசியுள்ளார். இதனால் ஜெய்ஸ்வாலின் அதிரடியை ரியான் பராக் பேட்டிங்கோடு ஒப்பிட்டு ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். கடைசியாக விளையாடிய போட்டியில் இம்பேக்ட் பிளேயராக களமிறங்கி மோசமான இம்பேக்டை ஏற்படுத்தினார் ரியான் பராக். இதனால் எப்போது சொன்னபடி 4 சிக்சர்களை விளாசப் போகிறார் என்று ரசிகர்களை கேள்வி எழுப்பி சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.