
பஞ்சாப் அணி அபார வெற்றி
ஐபிஎல் 2021 தொடரின் நேற்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டது. தொடர்ந்து 3 போட்டிகளில் தோல்வியை அடைந்த அந்த அணிக்கு இது சிறப்பான கம்பேக்காக அமைந்தது. மீதம் 14 பந்துகள் இருந்த நிலையிலேயே இந்த வெற்றியை அந்த அணி வீரர்கள் சாத்தியப்படுத்தினர்.

131 ரன்களை அடித்த மும்பை
முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சிறப்பாக விளையாடிய நிலையிலும் அந்த அணியின் மற்ற வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் அவுட்டாகி பெவிலியனுக்கு திரும்பியதை அடுத்து 131 ரன்களை மட்டுமே அந்த அணியால் எடுக்க முடிந்தது.

ஒரு விக்கெட் இழப்பு
இதையடுத்து இந்த இலக்கை பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் மற்றும் கிறிஸ் கெயில் ஆகியோரே முடித்து வைத்தனர். பஞ்சாப் கிங்ஸ் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்தது. கேஎல் ராகுல் துவக்க வீரராக களமிறங்கி போட்டி முடியும்வரையில் அணியை சிறப்பாக வழிநடத்தி வெற்றியை அணிக்கு பரிசளித்தார்.

43 ரன்கள் குவிப்பு
இதுமட்டுமின்றி பௌலிங்கின்போதும் அணி வீரர்களை அவர் சிறப்பாக வழிநடத்தியதை காண முடிந்தது. இந்நிலையில் இந்த போட்டியில் அவுட்டாகாமல் 43 ரன்களை கிறிஸ் கெயில் அடித்திருந்தார். 41 வயதானாலும் அவருடைய வேகம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

கெயில் மகிழ்ச்சி
இதனிடையே, இந்த வெற்றி ஆசுவாசத்தை ஏற்படுத்தியுள்ளதாக கிறிஸ் கெயில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அந்த அணியின் ட்விட்டர் பக்கத்தில் அர்ஷ்தீப் சிங்குடன் மேற்கொண்ட உரையாடலில் பேசிய கெயில், தான் சிறப்பான பிட்னசுடன் உள்ளதாகவும் மசாஜ் உள்ளிட்டவற்றை செய்து தன்னுடைய உடலை சிறப்பாக பராமரிப்பதாகவும் கூறியுள்ளார்.

போட்டியை எளிதாக்கிய வீரர்கள்
தன்னுடைய போட்டிகளில் தான் எப்போதும் டாப்பில் உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். கேஎல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் இருவரும் போட்டியை எளிதாக்கியதாகவும் அவர் பாராட்டு தெரிவித்தார். இத்தகைய பேட்ஸ்மேன்கள் அணியின் வெற்றிக்கு மிகவும் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.


Click it and Unblock the Notifications











