டப்ளின்: இந்தியா - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதல் இரு டி20 போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை மொத்தமாக விற்று தீர்ந்துள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரை 3-2 என்று இந்திய அணி இழந்தது. இந்த நிலையில் அயர்லாந்து அணியுடன் 3 போட்டிகள் டி20 தொடரில் இந்திய அணி பங்கேற்றுள்ளது. இந்த இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று தொடங்கவுள்ளது. இந்த தொடருக்கு காயத்திற்கு பின் 11 மாதங்கள் ஓய்வில் இருந்த பும்ரா மீண்டும் களம் திரும்பியுள்ளார். அதுமட்டுமல்லாமல் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே இந்தியா - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 3 டி20 போட்டியும் டப்ளினில் உள்ள கிராமத்திலேயே நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்திய அணியை பார்ப்பதற்காகவே அயர்லாந்து நாட்டின் கிரிக்கெட் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். இந்தத் தொடருக்கு இந்திய அணியின் சீனியர் வீரர்கள் வரவில்லையென்றாலும், பும்ரா, ருதுராஜ், சஞ்சு சாம்சன் உள்ளிட்டோர் இருக்கின்றனர். இதனால் நட்சத்திர வீரர்களை பார்க்க ரசிகர்கள் குவிந்து வருகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் அயர்லாந்து மைதானத்தில் டிக்கெட் விற்பனை தொடங்கிய சில மணி நேரங்களில் முதல் இரு போட்டிகளுக்குமான டிக்கெட்டுகள் மொத்தமாக விற்று தீர்ந்துவிட்டன. அதேபோல் கடைசி டி20 போட்டிக்கான டிக்கெட்டுகள் வேகமாக விற்று வருவதாக அயர்லாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்திய அணி எந்த நாட்டிற்கு சென்றாலும், அங்கும் ரசிகர்கள் கூடுவார்கள் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அயர்லாந்து விக்கெட் கீப்பர் டக்கர் பேசுகையில், இந்திய வீரர்களை பார்ப்பதற்காக தான் ரசிகர்கள் அதிகளவில் மைதானங்களுக்கு வருவார்கள். நிச்சயம் ஆதரவும் அவர்களுக்கு தான் அதிகமிருக்கும். அது அயர்லாந்து கிரிக்கெட்டுக்கும் நல்லது என்றே நினைக்கிறேன். இந்திய அணியுடன் ஏற்கனவே விளையாடி இருக்கிறோம். எங்கள் அணியிலும் அனுபவ வீரர்கள் இருக்கிறார்கள்.
அதனால் இந்திய அணிக்கு எதிராக எங்களால் என்ன செய்ய முடியும் என்று காட்ட விரும்புகிறோம். அண்மையில் ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான தொடரில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, அடுத்த உலகக்கோப்பைத் தொடருக்கு தகுதி பெற்றிருக்கிறோம். அதனால் இந்திய அணிக்கு எதிரான தொடர் சவால் நிறைந்ததாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.