
முதல் போட்டி துவக்கம்
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3 வடிவங்களிலான தொடர்கள் அடுத்தடுத்து நடைபெறவுள்ளன. முதலில் டெஸ்ட், தொடர்ந்து டி20 மற்றும் ஒருநாள் போட்டித் தொடர்கள் நடைபெறவுள்ள நிலையில் தற்போது டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சென்னையில் இன்றைய தினம் துவங்கியுள்ளது.

முன்னேற்பாட்டில் பிசிசிஐ
இந்த 3 வடிவங்களிலான தொடர்களை அடுத்து ஐபிஎல் 2021 தொடர் வரும் ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெறவுள்ளன. இதற்கான முன்னேற்பாடுகளில் பிசிசிஐ தற்போது முதலே ஈடுபட்டுள்ளது. இந்த தொடர் இந்தியாவில் அல்லது யூஏஇயில் நடைபெறுவது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. ஆயினும் இந்தியாவில் நடத்தவே முன்னுரிமை அளிக்கப்படும் என்று பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் நடைபெறுகிறது
இதனிடையே வரும் 18ம் தேதி பிற்பகல் 3 மணியளவில் ஐபிஎல் 2021 தொடருக்கான ஏலம் சென்னையில் சிறிய அளவில் நடத்தப்பட உள்ளது. இதற்கென சில வீரர்களை தக்க வைத்தும் சில வீரர்களை விடுவித்தும் கடந்த மாதத்தில் 8 ஐபிஎல் அணிகளும் அறிவித்தன. ஐபிஎல் ஏலத்திலல் பங்கேற்பதற்காக தயாராக அணிகள் காணப்படுகின்றன.

1097 வீரர்கள் பதிவு
இந்நிலையில் இந்த ஏலத்திற்கென இந்தியாவை சேர்ந்த 814 வீரர்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 283 வீரர்கள் என மொத்தம் 1097 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். அதிகபட்சமாக மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த 56 வீரர்கள், ஆஸ்திரேலியாவை சேந்த 42 வீரர்கள் மற்றும் ஆப்கானிஸ்தானின் 30 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். சிறிய அளவில் இருந்தாலும் ஏலம் விறுவிறுப்பாக நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications