பெங்களூர்: பெங்களூரிலிருந்து அரை இறுதிப் போட்டிகளை மும்பைக்கு மாற்றுவதற்கு வெளிநாட்டு வீரர்கள் கொடுத்த நெருக்கடியே காரணம் என்று கூறப்படுகிறது.பெங்களூரில் ஐபிஎல் தொடரின் இரு அரை இறுதிப் போட்டிகளும் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் நேற்று முன்தினம் நடந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து போட்டிகளை மும்பைக்கு மாற்றி விட்டது ஐபிஎல் நிர்வாகம். இதனால் கர்நாடக அரசும், பெங்களூர் காவல்துறையும் அதிருப்தி அடைந்துள்ளன.இந்த நிலையில் ஐபிஎல் அணிகளில் இடம் பெற்றுள்ள சில வெளிநாட்டு வீரர்கள், பெங்களூரில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு விளையாட தயக்கம் காட்டியதால்தான் போட்டிகளை மும்பைக்கு மாற்ற ஐபிஎல் முடிவு செய்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து ஐபிஎல்லுக்கு நெருக்கமான ஒரு தரப்பு கூறுகையில், அரை இறுதிப் போட்டிகளில் நான்கு அணிகள் மோதவுள்ளன. ஒவ்வொரு அணியிலும் குறைந்த்து ஆறு முதல் 7 வெளிநாட்டு வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். எனவே குறைந்தது 24 வீரர்கள் உள்ளனர். அதே அளவிலான வெளிநாட்டு பயிற்சியாளர்கள், உதவியாளர்களும் உள்ளனர். இவர்களில் பலர் பெங்களூரில் ஆட அச்சம் தெரிவித்தனர். இதையடுத்தே வேறு வழியில்லாமல் போட்டிகளை மாற்ற நேரிட்டது என்றனர்.ஆனால் குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்த தினத்தன்று மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான போட்டி எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை. வழக்கம் போலவே போட்டி நடைபெற்று முடிந்தது. இதைக் காரணம் காட்டி, போட்டிக்கு சிறந்த முறையில் காவல்துறை பாதுகாப்பு கொடுத்ததை பெங்களூர் போலீஸார் தெரிவிக்கின்றனர்.இத்தனைக்குப் பின்னரும் சில வெளிநாட்டு வீரர்கள் பெங்களூரில் விளையாட தயக்கம் காட்டியதே போட்டிகள் மும்பைக்கு மாறக் காரணம் என்று உறுதியாக நம்பப்படுகிறது.