மும்பை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் வெறும் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்திருப்பதை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்திய டி20 அணியின் ராக் ஸ்டார் வீரர் சூர்யகுமார் யாதவ். ஏபி டிவில்லியர்ஸ் எப்படி எந்தப் பக்கம் பந்தை அடிப்பார் என்று கணிக்க முடியாதோ, அதேபோல் சூர்யகுமார் யாதவின் ஆட்டத்தையும் கணிப்பது எளிதல்ல. அந்த அளவிற்கு பவுலர்களின் திட்டங்களை மாற்றுவதிலும், ஃபீல்டர்களை ஏமாற்றி பவுண்டரி விளாசுவதிலும் வல்லவர்.

ஆனால் டி20 கிரிக்கெட்டில் ராஜாவாக உள்ள சூர்யகுமார் யாதவ், ஒருநாள் கிரிக்கெட்டில் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறார். ஐபிஎல் தொடருக்கு முன் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆடிய 3 ஒருநாள் போட்டிகளிலும் டக் அவுட்டான சூர்யகுமார் யாதவ், ஐபிஎல் தொடரின் நடுப்பகுதியில் ஃபார்முக்கு வந்தார். இருப்பினும் பிளாட் பிட்ச்களில் ஆடிய ஆட்டத்தை போல், சிறந்த பிட்ச்சில் சூர்யகுமார் யாதவால் விளையாட முடியவில்லை.
இருப்பினும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். இந்த நிலையில் நேற்றௌ நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 3வது வீரராக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், வெறும் 19 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் சூர்யகுமார் யாதவ் ஒருநாள் போட்டிக்கு சரிபட்டு வரமாட்டார் என்ற விமர்சனங்கள் அதிகரித்துள்ளது.
ஏனென்றால் இதுவரை 24 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள சூர்யகுமார் யாதவ் வெறும் 2 அரைசதங்கள் மட்டும் அடித்துள்ளார். அதேபோல் 452 ரன்கள் மட்டுமே அடித்துள்ள அவரின் பேட்டிங் சராசரி வெறும் 23.79ஆக உள்ளது. முதல் போட்டி நடப்பதற்கு முன்பாக இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, சூர்யகுமார் யாதவ் ஒருநாள் போட்டிகளையும் டி20 போட்டியை போல் அணுகி வருகிறார்.
குறைந்த அளவிலான ஒருநாள் போட்டிகளை மட்டுமே விளையாடி இருப்பதால் சூர்யகுமார் யாதவிற்கு அனுபவம் போதவில்லை என்று காட்டமாக விமர்சித்திருந்தார். இந்த நிலையில் முதல் போட்டியிலேயே 19 ரன்களில் ஆட்டமிழந்ததால், வர்ணனை செய்து கொண்டிருந்த ஆகாஷ் சோப்ரா, எனது கேள்விக்கு சூர்யகுமாரால் இன்னும் பதில் அளிக்க முடியவில்லை என்று விமர்சித்துள்ளார். இதனால் சூர்யகுமார் யாதவிற்கு பதில் சஞ்சு சாம்சனை சேர்க்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.