பெங்களூரு: ஆர்சிபி அணியின் தலைமை பயிற்சியாளராக ஆண்டி பிளவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், ஆலோசகராக ஏபி டிவில்லியர்ஸை கொண்டு வர அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் முடிந்த ஐபிஎல் தொடரின் சூடே குறையாத நிலையில், அடுத்த ஆண்டுக்கான முக்கியப் பணிகளில் ஆர்சிபி அணி மும்முரமாக இறங்கியுள்ளது. ஏனென்றால் 4 ஆண்டுகளுக்கு பின் சொந்த மண்ணில் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, மோசமான தோல்வியை பதிவு செய்தது. வெளி நாடுகள் மற்றும் வெளி மைதானங்களில் நடத்தப்பட்ட ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக 3 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி பலரையும் ஆச்சரியத்தை ஆழ்த்தியது ஆர்சிபி அணி.

அதில் முதல் ஆச்சரியம் ஆர்சிபி ரசிகர்களுக்கு தான். ஏனென்றால் சீரான ஆட்டத்தை ஒவ்வொரு ஆண்டும் வெளிப்படுத்த முடியாமல் திணறி வந்த ஆர்சிபி அணியா இது என்ற ரசிகர்களே ஆச்சரியப்பட்டனர். இதனால் சொந்த மண்ணில் நடந்த ஐபிஎல் தொடருக்கு வழக்கம் போல் எக்கச்சக்க ஆதரவை பொழிந்து தள்ளினர். இதனால் ஆர்சிபி அணி ரசிகர்கள் சொல்வது போல் ஈசாலா கப் நம்தே என்பதை உண்மையாக்கிவிடுவார்களோ என்ற ஜெர்க் மற்ற அணி ரசிகர்களுக்கும் ஏற்பட்டது.
ஆனால் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி படுதோல்வியை சந்தித்தது. இதனால் ஐபிஎல் தொடரில் 6ஆம் இடத்தை தான் ஆர்சிபி அணியால் பிடிக்க முடிந்தது. இதனால் கோபமடைந்த ஆர்சிபி அணி நிர்வாகம், தலைமை பயிற்சியாளர் மைக் ஹெசனை நீக்கி அறிவிப்பு வெளியிட்டது. இதனால் ஆர்சிபி அணியின் புதிய பயிற்சியாளராக யார் வருவார்கள் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது. இந்த நிலையில் லக்னோ அணியின் முன்னாள் பயிற்சியாளரான ஆண்டி பிளவரை ஆர்சிபி அணி ஒப்பந்தம் செய்தது.

இந்த நிலையில் ஆர்சிபி அணியின் ஆலோசகராக நட்சத்திர வீரர் ஏபி டிவில்லியர்ஸ் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஆர்சிபி அணிக்காக பல்வேறு ஏலியன் லெவல் இன்னிங்ஸ்களை விளையாடி பல போட்டிகளை தனியாளாக வென்று கொடுத்துள்ளார் டிவில்லியர்ஸ். இதனால் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள ஐபிஎல் தொடருக்காக ஆர்சிபி ரசிகர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர்.