சென்னை: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்த தோல்விக்கு என்ன காரணம், யார் மீது தவறு, ரோகித் சர்மா கேப்டன்சி உள்ளிட்ட ஏராளமானவை குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் விவி கிரி மைக் கேல் தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார்.
அதில் விவி கிரி பேசுகையில், இந்திய அணியின் தோல்விக்கு முதலில் ஐசிசி தான் காரணம். எதற்காக இங்கிலாந்தில் மட்டும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடத்தப்படுகிறது. ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, ஆசிய நாடுகளில் ஏன் இறுதிப்போட்டியை ஐசிசி நடத்த முன்வரவில்லை என்று தெரியவில்லை. அடுத்த முறையும் இங்கிலாந்தில் தான் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அது இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கு சாதகமாக உள்ளது.

அதேபோல் இந்த தோல்விக்கு இந்திய அணியை தேர்வு செய்த தேர்வுக் குழுவை சாட வேண்டும். ஏனென்றால் பும்ரா, ரிஷப் பண்ட் ஆகியோர் இல்லாத போது, இங்கிலாந்து சூழலுக்கு ஏற்ப அணியை தேர்வு செய்திருக்க வேண்டும். அதேபோல் நன்றாக ஸ்விங் செய்யக் கூடிய வீரர்களான அர்ஷ்தீப் சிங், புனவேஷ்வர் குமார் ஆகியோரை நிச்சயம் சேர்த்திருக்க வேண்டும். அதேபோல் பிளேயிங் லெவனில் அஸ்வின் மற்றும் அக்சர் படேல் இருவரையும் சேர்த்திருக்க வேண்டும்.
ஏனென்றால் அக்சர் படேல் பவுலிங் மட்டுமல்லாமல் பவுலிங்கிலும் சிறந்த ஃபார்மில் இருக்கிறார். ஐபிஎல் தொடரிலேயே அவரின் பேட்டிங் ஃபார்ம் அபாரமாக இருந்தது. அதேபோல் அஸ்வினை தேர்வு செய்யாதது மடத்தனமான முடிவு. அஸ்வின் இருந்திருந்தால் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ஹெட் ஆகியோரின் விக்கெட்டை நிச்சயம் வீழ்த்தி இருப்பார். உமேஷ் யாதவை பிளேயிங் லெவனில் எடுத்தது பெரும் தவறாகும்.
சீனியர் வீரர்களான புஜாரா, ரோகித் சர்மா தேவையில்லாத ஷாட் விளையாடி விக்கெட்டை கொடுத்திருக்கிறார்கள். விராட் கோலியின் விக்கெட்டை பற்றி சுனில் கவாஸ்கர் நேரடியாக விமர்சித்திருக்கிறார். மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியான தவறுகளை செய்து வருகிறார். ரஹானே, ஜடேஜா சிறப்பாக ஆடினாலும், அக்சர் படேல் அணியில் சேர்த்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல் போதுமான பயிற்சி இல்லை என்று ரோகித் சர்மா, ராகுல் டிராவிட் கூறியது பற்றிய கேள்விக்கு, இதுவொரு நொண்டி சாக்கு தான். ஐபிஎல் தொடரும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரும் அடுத்தடுத்து நடக்கப் போகிறது என்பது அனைவருக்கும் முன்பாகவே தெரியும். இதனால் ஆஸி. அணி செய்தது போல், முக்கியமான வீரர்களுக்கு ஓய்வளித்திருக்க வேண்டும். ஆனால் இந்திய அணியினர் அதனை செய்யவில்லை என்று விமர்சித்துள்ளார்.

அதேபோல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை 3 போட்டிகள் கொண்ட தொடராக நடத்த ரோகித் சர்மா கோரியிருந்தது பற்றிய கேள்விக்கு, இறுதிப்போட்டியை ஒரேயொரு போட்டியாக நடத்துவதற்கு நான் முதலில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகிறேன். ஆனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 3 போட்டிகள் நடத்தி சாம்பியனை தேர்வு செய்வது சாதாரணமல்ல. 3 போட்டிகள் நடத்த அதிக நாட்களாகும் என்று கருதுவதாக தெரிவித்தார்.
தொடர்ந்து சுப்மன் கில் கேட்ச் சர்ச்சை பற்றிய கூறுகையில், இந்திய வீரர் சுப்மன் கில் ஆட்டமிழந்தது நமக்கு மிகப்பெரிய பின்னடைவாகும். அந்த கேட்ச் பற்றி 3வது நடுவர், விரல்கள் பந்திற்கு கீழ் இருப்பதாக கூறுகிறார். ஆனால் 2 விரல்களுக்கு இடையில் பந்து தரையில் பட்டுள்ளது. அதனால் அது விக்கெட் இல்லை. எந்த நேரத்திலும் பந்து தரையில் படக் கூடாது. விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும் மேலும், சாஃப்ட் சிக்னல் மாதிரியான அசிங்கமான விஷயம் பார்த்ததில்லை என்று விமர்சித்தார்.