மும்பை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) ஆண்கள் சீனியர் அணிக்கான தேர்வுக்குழுவில் காலியாக உள்ள இரண்டு இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வரும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரவீன் குமார் இந்தப் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார்.
அஜீத் அகர்கர் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட இந்த தேர்வுக்குழுவில் இடம்பிடிக்க, பல முன்னாள் வீரர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க செப்டம்பர் 10 கடைசித் தேதியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரவீன் குமாரின் விண்ணப்பம் கிரிக்கெட் வட்டாரங்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பிரவீன் குமார் தான் கிரிக்கெட் விளையாடிய காலத்தில் பல்வேறு மோதல் சர்ச்சைகளில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கோபக்கார கிரிக்கெட் வீரராக அறியப்பட்டதாலேயே அவருக்கான வாய்ப்பு இந்திய அணியில் குறைந்தது என அப்போது பேச்சு எழுந்தது. இந்த நிலையில் அவர் இந்திய அணியின் தேர்வுக் குழு உறுப்பினராக வந்தால் எப்படி இருக்கும்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தற்போதைய தேர்வுக்குழுவில் மத்திய மண்டலத்தின் பிரதிநிதியாக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சுப்ரதோ பானர்ஜி உள்ளார். 2007 முதல் 2012 வரை இந்திய அணிக்காக 6 டெஸ்ட், 68 ஒருநாள் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடி, ஒட்டுமொத்தமாக 112 விக்கெட்டுகளை வீழ்த்திய பிரவீன் குமார், மத்திய மண்டலத்தின் அடுத்த தேர்வாளராகும் நோக்கில் தனது விண்ணப்பத்தைச் சமர்ப்பித்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு முதல், பிரவீன் குமார் உத்தரப் பிரதேச சீனியர் ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமைத் தேர்வாளராகப் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிசிசிஐ வெளியிட்டுள்ள விதிமுறைகளின்படி, தேர்வுக்குழு உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்திருக்க வேண்டும். மேலும், அவர்கள் குறைந்தது ஏழு டெஸ்ட் போட்டிகள் அல்லது 30 முதல் தர போட்டிகளில் ஆடியிருக்க வேண்டும். இல்லையெனில், பத்து ஒருநாள் போட்டிகள் மற்றும் 20 முதல் தரப் போட்டிகளில் விளையாடிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஐந்து ஆண்டுகள் பிசிசிஐ-யின் எந்தவொரு கிரிக்கெட் குழுவிலும் உறுப்பினராக இருந்திருக்கக் கூடாது என்பதும் ஒரு முக்கிய விதியாகும்.
போட்டியில் மற்ற வீரர்கள்
பிரவீன் குமாரைத் தவிர, முன்னாள் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி. சிங்-ம் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் அவர் இன்னும் விண்ணப்பிக்கவில்லை எனத் தெரிகிறது. 2005 முதல் 2011 வரை இந்தியாவிற்காக 82 போட்டிகளில் விளையாடி 124 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆர்.பி. சிங், 2007-ல் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார். அவர் இதற்கு முன்பு பிசிசிஐயின் கிரிக்கெட் ஆலோசனைக் குழுவில் (CAC) உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
இதற்கிடையில், தெற்கு மண்டல தேர்வாளர் பதவிக்கு முன்னாள் இந்திய இடது கை சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா விண்ணப்பித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓஜா, 2008 முதல் 2013 வரை இந்தியாவுக்காக 24 டெஸ்ட், 18 ஒருநாள் மற்றும் 6 டி20 போட்டிகளில் விளையாடி 144 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். தற்போது தெற்கு மண்டல பிரதிநிதியாக எஸ். சரத் உள்ளார்.
தற்போது அஜித் அகர்கர் (மேற்கு), எஸ்.எஸ். தாஸ் (கிழக்கு), அஜய் ரத்ரா (வடக்கு), சுப்ரதோ பானர்ஜி (மத்திய), மற்றும் எஸ். சரத் (தெற்கு) ஆகியோர் தேர்வுக்குழுவில் உள்ளனர். செப்டம்பர் 10 ஆம் தேதிக்குப் பிறகு, நேர்காணலுக்குப் பின் புதிய தேர்வாளர்கள் யார் என்பது இறுதி செய்யப்படும். அனுபவம் வாய்ந்த முன்னாள் வீரர்கள் பலர் களத்தில் இருப்பதால், இந்தப் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.