கராச்சி : இந்திய கிரிக்கெட் அணியிலேயே சிறந்த வீரர் மற்றும் கேப்டன் என்றால் அது மகேந்திர சிங் தோனி தான் என்று பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் ரஷீத் லதிப் பாராட்டியுள்ளார். லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மகேந்திர சிங் தோனி மூன்று பந்துகளைப் பிடித்து 12 ரன்கள் விளாசினார்.
இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 5 ஆயிரம் ரன்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை தோனி பெற்றார். இது குறித்து பாராட்டியுள்ள முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் லத்தீப் தோனி தான் இருப்பதிலேயே சிறந்த இந்திய கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்று கூறியுள்ளார்.

தோனி ஐபிஎல் தொடரில் மட்டும் 5 ஆயிரம் ரன்களை அடித்திருக்கிறார். அவர் எப்போதுமே ஒரு ஃபார்முலாவை பயன்படுத்தி வருகிறார். தோனியின் வரலாறு தங்கத்தால் பொறிக்கப்பட வேண்டும். அது இந்திய கிரிக்கெட்டுக்காக மட்டுமல்ல உலக கிரிக்கெட்டையும் சேர்த்து தான் நான் சொல்கிறேன்.
நீங்களும் நானும் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் ஏதும் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தாது. தோனி தான் சிறந்த இந்திய கேப்டன் மற்றும் சிறந்த வீரர் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் கிடையாது. தோனியின் பேட்டிங்கை பார்த்தாலே உங்களுக்கு தெரியும். அவர் வெறும் மூன்று பந்துகளை தான் எதிர்கொண்டார்.
அவரால் என்ன முடியும் என்பதை உலகிற்கு காட்டிவிட்டார். நான் சச்சின் டெண்டுல்கரை பார்த்திருக்கிறேன், கவாஸ்கரை பார்த்திருக்கிறேன், ஏன் விராட் கோலியை கூட பார்த்திருக்கிறேன். ஆனால் மிகவும் பிரபலமான சிறந்த வீரர் என்றால் அது தோனி தான்.
தோனி களத்தில் தன்னைத்தானே கையாளும் விதம் மற்றவர்களை வழிநடத்தும் விதம் கண்டிப்பாக வித்தியாசமான ஒரு விவேகத்தை வீரர்களுக்கு கொடுக்கும். இதை எல்லாம் யாராலும் செய்ய முடியாது என ரசித் லிதிப் பாராட்டியுள்ளார்.