X-Factor பண்ட்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஆட்டம் உண்மையில் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமே. எதிர்பார்த்த அளவு இல்லை. டாப் வீரர்களில் ஒருவர் கூட அணியை காப்பாற்றும் பணியில் ஈடுபடவில்லை. குறிப்பாக, புஜாரா மீது இன்றும் புகார் கடிதம் வாசிக்கப்பட்டு வருகிறது. அவர் உண்மையில் ஃபார்மில் தான் இருக்கிறாரா? அல்லது இங்கிலாந்து முன்னாள் வீரர் ஜோனதன் டிராட் போல மனஅழுத்தத்தில் சிக்கிக் கொண்டு தவிர்க்கிறாரா? என்று தெரியவில்லை. "X-Factor" என்று வர்ணிக்கப்படும் ரிஷப் பண்ட்டால் கூட, தேவைப்பட்ட நேரத்தில் ரன்களை அடிக்க முடியவில்லை.
பெரும் பின்னடைவு
இது எல்லாவற்றையும் விட மேலாக, விராட் கோலி பேட்டிங்கிலும் ஒன்றும் செய்யவில்லை. கேப்டன்சியிலும் தாக்கம் ஏற்படுத்தவில்லை. இதனால், டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலியின் கேப்டன்ஷிப் குறித்தும் கேள்வி எழுப்பப்டுகிறது. ஏற்கனவே ஒருநாள், டி20, டெஸ்ட் போட்டிகளுக்கு என தனித்தனி கேப்டன்களை நியமிக்க வேண்டும் என்று பரவலாக கோரிக்கை எழுந்து வரும் நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்வி கோலிக்கு மேலும் ஒரு பின்னடைவாக அமைந்துள்ளது.
சாதித்த நியூசிலாந்து
உலகக் கோப்பை டைட்டிலை வசமாக்க முடியாமல் பல ஆண்டுகளாக திண்டாடிக் கொண்டிருந்தது நியூசிலாந்து. ஒவ்வொரு சீஸனிலும், ஒவ்வொரு ஐசிசி தொடர்களிலும், அரையிறுதி அல்லது இறுதி வரை முன்னேறி தோற்பது தான் இத்தனை ஆண்டுகாலமாக நியூசிலாந்தின் அமைப்பாக இருந்து வந்தது. இப்படி பலகட்ட சோதனைகளுக்கு பிறகு நியூசிலாந்து டெஸ்ட் கோப்பையை வென்றிருப்பது அவர்களது கிரிக்கெட் வாழ்க்கையில் மறக்க முடியாது நிகழ்வாக அமைந்துள்ளது. உலகெங்கிலும் இருந்து ரசிகர்கள் பரவலாக வாழ்த்துகளை தெரிவித்தனர்.
ஆச்சர்ய தகவல்
இந்நிலையில், ஆஸ்திரேலிய முன்னாள் ஸ்பின்னர் பிராட் ஹாக், தனது சிறந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அணி வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதில், இந்திய கேப்டன் விராட் கோலிக்கு இடமில்லை என்பது ஆச்சர்ய தகவல். அவரது அணியில் ரோஹித் ஷர்மா, டிமுத் கருணரத்னே, கேன் வில்லியம்சன், ஸ்டீவன்சன், பாபர் அஸம், பென் ஸ்டோக்ஸ், ரிஷப் பண்ட், கைல் ஜேமிசன், ரவிச்சந்திரன் அஷ்வின், ஸ்டூவர்ட் பிராட், முகமது ஷமி, மார்னஸ் லாபஸ்கேக்னே ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இவருடைய பட்டியலில் மொத்தம் நான்கு வீரர்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.