
எழுதப்படாத விதி
ஐபிஎல் 2021 தொடரின் இரண்டாம் பகுதியில் தொடர் வெற்றிகளை குவித்துவந்த சென்னை சூப்பர் கிங்ஸ், முதல் அணியாக பிளே ஆஃப் முன்னேறியது. தோனியின் மோசமான ஃபார்ம் மட்டுமே, அணியின் மைனஸாக இருந்தது. ஆனால், அதன் பிறகு சூழலே மாறிவிட்டது. அணியின் மிடில் ஆர்டர் ஒவ்வொரு போட்டியிலும் தடுமாறியது. ராயுடு தவிர, மிடில் ஆர்டரில் மற்ற வீரர்களால் சோபிக்கவே முடியவில்லை. குறிப்பாக, மொயீன் அலி, ரெய்னா, தோனி ஆகியோர் தோனி ஃபெயில் லிஸ்டில் உள்ளனர். குறிப்பாக தொடக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட், டு பிளசிஸ் சரியாக விளையாடவில்லை எனில் சென்னை அணியால் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. இவர்கள் இருவரும் நன்றாக விளையாடினால் வெற்றி, இல்லையேல் தோல்வி என்பது எழுதப்படாத விதியானது.

சுமையை சுமக்கும் 3 பேர்
இந்த இக்கட்டான சூழலில் தான் நாளை டெல்லி அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்கிறது. இதில் அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, மிடில் ஆர்டரில் உத்தப்பாவுக்கு பதில் ஜெகதீசனுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று தெரிகிறது. அதேபோல், பவுலிங் யூனிட்டில் ஜோஷ் ஹேசில்வுட் நீக்கப்பட்டு அவருக்கு பதில் ஜேசன் சேர்க்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எது எப்படியிருந்தாலும், சென்னை அணியின் ஒட்டுமொத்த சுமையையும் சுமந்து வருவது மூன்று பேர் மட்டுமே. ருதுராஜ் கெய்க்வாட், டு பிளசிஸ், ரவீந்திர ஜடேஜா. இவர்கள் மூவரையும் நீக்கிவிட்டு பார்த்தால், சென்னை சூப்பர் கிங்ஸ் பூஜ்யம் தான். 100 ரன்கள் கூட அடிக்க மாட்டார்கள்.

எண்ணத்தை மாற்றிவிட்டார்
இந்நிலையில், டு பிளசிஸ் குறித்து கெளதம் கம்பீர் புகழ்ந்து தள்ளியுள்ளார். டு பிளசிஸ் ஒரு அபாயகரமான டி20 கிரிக்கெட் வீரராக இருப்பார் என்று தான் எதிர்பார்க்கவில்லை. அவரை தவறாக கணித்து நான் ஏமாந்துவிட்டேன் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், "அவர் ஒரு ஆபத்தான டி 20 பேட்ஸ்மேன் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. அவர் சிஎஸ்கேவுக்காக ரன்கள் சேர்த்தார். ஆனால் ஷேன் வாட்சனைப் போன்ற ஒருவரின் தாக்கத்தை அவர் ஒருபோதும் ஏற்படுத்தவில்லை. டு பிளசிஸ் 40 பந்துகளில் 50 ரன்களை எடுப்பார். அவரால் எதிரணி பந்துவீச்சாளர்களை சிரமப்படுத்த முடியாது. அவர் மேட்ச் வின்னராக இருக்கப் போவதில்லை என்று நினைத்தேன். ஆனால், டு பிளசிஸ் எனது எண்ணம் தவறு என்பதை நிரூபித்துவிடடார். நான் மட்டுமல்ல, அவரை குறைவாக எடைப்போட்ட அனைவருக்கும் தனது பேட்டிங் மூலம் தன்னை நிரூபித்துவிட்டார்" என்று புகழ்ந்துள்ளார்.

ரசிகர்கள் அச்சம்
டு ப்ளெசிஸ் தற்போது ஐபிஎல் 2021 இல் 14 போட்டிகளில் 546 ரன்கள் எடுத்து 45.50 சராசரி வைத்துள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 137.53. இந்த பிளே ஆஃப் போட்டிகளில் நிச்சயம் ஆரஞ்சு கேப் கைப்பற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இப்போது சிக்கல் என்னவெனில், கம்பீர் திடீரென டு பிளஸிஸை புகழ்ந்து பேசியிருப்பது சிஎஸ்கே ரசிகர்களை சற்றே கலக்கமடையைச் செய்துள்ளது. காரணம், கம்பீர் என்ன சொன்னாலும், அதற்கு நேர்மாறாகவே எல்லாம் நடக்கும் என்பது ரசிகர்களின் கருத்தாகும். சிஎஸ்கே இந்த தொடரில் பிளே ஆஃப் வராது என்று கம்பீர் கூறிய நிலையில், முதல் அணியாக பிளே ஆஃப் நுழைந்தது சிஎஸ்கே ஆர்மி. அப்போதே, கம்பீரை சிஎஸ்கே ரசிகர்கள் வச்சு செய்தனர். இந்நிலையில், அவர் டு பிளஸிஸை வானளவு புகழ்ந்து பேசியிருப்பதால், எங்க அவர் பிளே ஆஃபில் சரியாக விளையாடாமல் போய்விடுவாரோ என்ற அச்சம் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











