மும்பை: இந்திய அணிக்கு ரோகித் சர்மா போல் அனுபவம் வாய்ந்த கேப்டன் இல்லாமல், ஒரு ரப்பர் ஸ்டாம்ப் கேப்டனை நியமிக்க வேண்டும் என்று கம்பீர் விரும்பியதாக தகவல் கிடைத்துள்ளது. அதற்காகவே சுப்மன் கில்லுக்கு அதிக பொறுப்புகள் அளிக்கப்படுவதாகவும், இந்திய அணியை கட்டுப்படுத்த விரும்புவதால், கம்பீர் ரோகித் சர்மாவை பொறுப்பில் இருந்து நீக்கியதாகவும் கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் இந்திய அணி அறிவிக்கப்பட்டதில் இருந்து இந்திய அணிக்குள் மீண்டும் பிரச்சனை தொடங்கி இருக்கிறது. இந்திய ஒருநாள் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டார். சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்திய அணிக்கு வென்று கொடுத்த போதும், ரோகித் சர்மாவுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படவில்லை.

அதேபோல் 2027 உலகக்கோப்பை தொடரிலும் வாய்ப்பு அளிப்பது கடிதம் என்று அஜித் அகர்கர் கூறி இருக்கிறார். இதனால் ரோகித் சர்மா விரைவில் ஓய்வை அறிவிக்க வேண்டிய சூழலுக்கு பிசிசிஐ நிர்வாகம் தள்ளி இருக்கிறது. இதனால் ரோகித் சர்மாவின் ரசிகர்கள் பிசிசிஐ நிர்வாகத்தையும், தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் பயிற்சியாளர் கம்பீர் ஆகியோரையும் விளாசி வருகின்றனர்.
இந்த நிலையில் ரோகித் சர்மாவை கேப்டன்சியில் இருந்து நீக்கிய விவகாரத்தில் கவுதம் கம்பீரின் கைகள் இருப்பது தெரிய வந்துள்ளது. ஏனென்றால் ரோகித் சர்மா போன்ற அனுபவம் வாய்ந்த கேப்டன் அணியில் இருக்கும் போது, வெற்றியிலும், தோல்வியிலும் பெரும்பாலானவை கேப்டனுக்கு சென்று விடுகிறது. அதேபோல் ரோகித் சர்மாவை மீறி கம்பீரால் எந்த முடிவையும் எடுக்க முடியவில்லை.
என்னதான் ஓய்வறையில் அமர்ந்து திட்டம் கொடுத்தாலும், களத்தில் கம்பீரால் சில விஷயங்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் ஒருநாள் கேப்டன்சியில் இருந்தும் ரோகித் சர்மாவை நீக்க கம்பீர் கேட்டுக் கொண்டார். அதேபோல் சமீப காலமாக பிசிசிஐ நிர்வாகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இந்திய அணி இருக்க வேண்டும் என்று விரும்பி வருகிறது. அரசியல் ரீதியாகவும் இந்திய வீரர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இதனால் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் கேப்டனை நியமிக்க வேண்டும் என்பதில் கம்பீர் தீவிரமாக இருந்துள்ளார். அதாவது ஓய்வறையில் தீட்டப்படும் திட்டங்களை களத்தில் செயல்படுத்துவது மட்டுமே சுப்மன் கில்லின் பணி என்று சூழல் மாறிவிட்டது. இங்கிலாந்து டெஸ்ட் தொடர் மற்றும் ஆசியக் கோப்பை ஆகிய இரு தொடர்களிலும் இந்திய அணியின் கேப்டன்களான கில் மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரையும் கம்பீர் கட்டுப்படுத்தினார்.
ஆனால் ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா இருந்தால், இந்திய அணியை கட்டுப்படுத்த முடியாது. இந்திய அணியின் கலாச்சாரம் மீண்டும் மாற்றம் பெற்றுவிடும் என்று கம்பீர் முடிவு செய்து, ரோகித் சர்மாவை நீக்க அறிவுறுத்தி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் சுப்மன் கில் போதுமான அனுபவம் பெற்று சொந்தமாக முடிவு எடுக்கும் வரை இந்திய அணியின் கட்டுப்பாடு கம்பீரின் கைகளிலேயே இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.