சென்னை: ஐபிஎல் 2021 தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து கவுதம் கம்பீர் பட்டியலிட்டுள்ளார்.

கடந்த 2020 சீசன், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களும் சரி, அணியும் சரி மறக்க விரும்பும் சீசன். இத்தனை வருட ஐபிஎல் வரலாற்றில், சிஎஸ்கே பிளே ஆஃப் செல்லாத ஒரே டோர்னமெண்ட் இது ஒன்று தான். தோனி கேப்டன்ஷிப்பில் சிஎஸ்கே போராட முடியாமல் சரண்டர் ஆன ஒரே தொடரும் இது தான்.
இந்த நிலையில் தான், 2021 சீசனுக்கான ஏலம் இன்று சென்னையில் நடைபெறுகிறது. இதில், சென்னை அணியில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் குறித்து முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கூறுகையில், "ஷேன் வாட்சன் ஓய்வு பெற்றுவிட்டதால், நிச்சயம் அவரது இடத்தை ரீபிளேஸ் செய்தே ஆக வேண்டும். கடந்த சீசனில் ரெய்னா இல்லை. இந்த சீசனில் அவர் கம்பேக் கொடுக்கலாம்.
ஸ்பின் டிராக் கொண்ட சேப்பாக் தான் தோனியின் பலம். சிஎஸ்கேவுக்கு கேப்டனாக செயல்படத் தொடங்கியதில் இருந்து அவர் இந்த ஸ்பின் டிராக்கை நன்கு பயன்படுத்தி கிரிக்கெட் ஆடி வந்திருக்கிறார். ஆகையால், ஹர்பஜன் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளதால், சென்னை அணிக்கு ஒரு புதிய ஆஃப் ஸ்பின்னர் கண்டிப்பாக தேவை.
அதேசமயம், டுவைன் பிராவோவுக்கு வயது ஒரு பிரச்சனையாக உள்ளது. அவரால் முன்பு போல் விளையாட முடியுமா என்று தெரியவில்லை. ஆகையால் பிராவோவுக்கு பதிலாகவும் ஒரு மாற்று ஆல்-ரவுண்டரை தேர்வு செய்து வைத்துக் கொள்வது அவசியம். அதுவும் அவர் ஒரு வெளிநாட்டு வீரராக இருந்தால் சிறந்தது. சிஎஸ்கே-வில் பல வீரர்களுக்கும் வயது ஒரு பிரச்சனை தான்.
எனினும், இது சிறிய ஏலம் என்பதால், சிஎஸ்கே நிர்வாகம் அதிகம் ரிஸ்க் எடுக்காது. அடுத்த வருடம் நடக்கும் பெரிய ஏலத்தில் தான் அணி முழுவதும் மாற்றி அமைக்கப்படலாம்" என்றார்.