மும்பை: ரோகித் சர்மா டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், தற்போது ஒருநாள் போட்டிகளுக்கு மட்டுமே கேப்டனாக இருக்கிறார். இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணிக்கு மூன்று வடிவங்களுக்கும் ஒரே கேப்டன் இருப்பாரா அல்லது தனித்தனி கேப்டன்கள் இருப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தற்போது டெஸ்ட் அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட இருக்கிறார், டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் செயல்பட்டு வருகிறார். ஒருநாள் அணியின் கேப்டனாக இப்போது ரோகித் சர்மா செயல்பட இருக்கிறார். இந்தச் சூழ்நிலையில், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், இந்திய அணிக்கு வெவ்வேறு கேப்டன்கள் வேண்டுமா அல்லது ஒரே கேப்டன் வேண்டுமா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

அப்போது, மூன்று வடிவங்களுக்கும் ஒரே கேப்டன் இருப்பதுதான் சரியான முடிவு எனவும், தான் வெவ்வேறு கேப்டன்கள் இருப்பதற்கு ஆதரவாக இல்லை எனவும் கூறினார். ஆனால், தற்போதுள்ள சூழ்நிலையில் அதிக சர்வதேச போட்டிகளிலும் ஐபிஎல் தொடரிலும் ஒரு வருடம் முழுவதும் இந்திய வீரர்கள் விளையாட வேண்டியுள்ளது. எனவே, ஒரே கேப்டன் இருப்பது சாத்தியமில்லை, இரண்டு கேப்டன்கள் இருப்பது தான் சரி என அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
இதுபற்றி அவர் பேசியதாவது: "ஒரு பயிற்சியாளராக, ஒரு நபருடன் வேலை செய்வது எளிது. மூன்று வடிவங்களுக்கும் ஒரே கேப்டன் இருந்தால், அது எளிதானது. ஆனால், இது எப்போதும் நடக்காது. இன்றைய காலகட்டத்தில் ஒரு கேப்டன் ஒரு ஆண்டின் 12 மாதங்களிலும் கேப்டன்சியைச் செய்வது சாத்தியமில்லை. நாம் பத்து மாதம் சர்வதேச கிரிக்கெட் விளையாடுகிறோம். அடுத்து ஐபிஎல் தொடரில் இரண்டு மாதம் விளையாடுகிறோம்."
"இந்திய அணிக்கு கேப்டனாக இருப்பவர்தான் ஐபிஎல் தொடரில் அவரது அணிக்கு கேப்டனாக செயல்படுவார். ஒரு இளம் வீரரைக் கேப்டனாக நியமித்து ஆண்டின் 12 மாதங்களிலும் கேப்டனாக செயல்பட வைப்பது அவருக்கு அதிக பணிச்சுமையை அளிப்பதாகும்."
"மனதளவிலும் அவரது தனிப்பட்ட ஆட்டத்திற்கும் அதிக அழுத்தத்தை அளிக்கும். எனவே, ஒரே கேப்டன் இருப்பது நல்லதுதான், ஆனால் இன்றைய கால சூழ்நிலையில் இரண்டு கேப்டன்கள் இருப்பதுதான் சிறந்ததாக இருக்கும். ஏனெனில், இரண்டு கேப்டன்களுக்கும் அழுத்தத்தைச் சரியாகப் பகிர்ந்து அளிக்கலாம். கேப்டனாக செயல்படாத போது அவர் சற்று ஆசுவாசமாக இருக்கலாம்" இவ்வாறு கௌதம் கம்பீர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.