மும்பை : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேபாள அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியில் பேட்டிங் வரிசை மாற்றி அமைக்கப்பட வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் லீக் ஆட்டத்தில் இந்திய அணி 266 ரன்கள் எடுத்தது. இதில் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க இஷான் கிஷன் மற்றும் ஹர்திக் பாண்டியா ஜோடி அபாரமாக விளையாடி இந்திய அணியை கரை சேர்த்தது.

இந்த நிலையில் நேபாள அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி பேட்டிங் வரிசையில் மாற்றம் செய்ய வேண்டும் என கௌதம் கம்பீர் பேசி உள்ளார். இது குறித்து பேசிய அவர் இஷான் கிஷன் தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் எல்லாம் அடித்திருக்கிறார். மேலும் தற்போது நல்ல பார்மில் இருக்கிறார். இதனால் இஷான் கிஷனை தொடக்க வீரராக களம் இறக்குங்கள். ரோகித் சர்மாவும் கில்லும் தொடர்ந்து நிறைய ஆட்டங்களில் விளையாடி இருக்கிறார்கள்.
அவர்கள் செட்டில் ஆகி விட்டார்கள் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் வீரர்களை விட பார்ம் தான் மிக முக்கியம். இஷான் கிஷனும் சுப்மன் கில்லும் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும். இதன் மூலம் ரோகித் சர்மா மூன்றாம் இடத்திலும் விராட் கோலி நான்காவது இடத்திலும் விளையாடலாம். இசான் கிஷன் தற்போது தொடர்ந்து மூன்று முறை ஒருநாள் கிரிக்கெட்டில் அரைசதம் அடித்திருக்கிறார்.

கே எல் ராகுல் அணிக்கு திரும்பினாலும் இஷான் கிஷனுக்கு அணியிலிருந்து நீக்க கூடாது என்று கூறியுள்ளார். விராட் கோலியோ, ரோகித் சர்மாவோ இதே போல் மூன்று அரை சதம் அடித்த பிறகு கே எல் ராகுல் வருகிறார் என்பதற்காக இருவரையும் நீக்க முடியுமா என கம்பீர் கேள்விகளை எழுப்பி உள்ளார். மேலும் திலக் வர்மாவை நம்பர் மூன்றாவது இடத்தில் விளையாடி வைத்து பார்க்க வேண்டும் என்றும் கம்பீர் யோசனை வழங்கி இருக்கிறார்.
நேபாள அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் கோலிக்கு பதில் திலக் வர்மாவை அணியில் சேர்த்து அவர் எப்படி விளையாடுகிறார் என்பதை பார்க்க வேண்டும் என்றும் கம்பிர் குறிப்பிட்டுள்ளார். ஏனென்றால் இடது கை பேட்ஸ்மேன் டாப் வரிசையில் தேவை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.