
16வது போட்டி
ஐபிஎல் 2021 தொடரின் நேற்றைய 16வது போட்டியில் ஆர்சிபி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியின் 178 ரன்கள் இலக்கை ஆர்சிபி சர்வ சாதாரணமான 16.3 ஓவர்களிலேயே முறியடித்தது. அதன் துவக்க வீரர்கள் விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல்லே இந்த போட்டியை முடித்து வைத்தனர்.

படிக்கல் முதல் ஐபிஎல் சதம்
இதையடுத்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபி சிறப்பான வெற்றி பெற்றுள்ளது. அணியின் தேவ்தத் படிக்கல் சதமும் விராட் கோலி அரைசதமும் அடித்தனர். படிக்கல் 52 பந்துகளில் அவுட்டாகாமல் 101 ரன்களை அடித்திருந்தார். இது ஐபிஎல்லில் அவரது முதல் சதமாகும். இதில் 11 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸ்கள் அடக்கம்.

சோதனையான துவக்கம்
கடந்த சீசனில் ஆர்சிபியின் அதிக ஸ்கோர் எடுத்த வீரராக இருந்த படிக்கல்லுக்கு இந்த சீசனின் துவக்கமே பிரச்சினையாக அமைந்தது. அவருக்கு கொரோனா வந்ததால் முதல் போட்டியில் அவரால் விளையாட முடியவில்லை. கடந்த இரு போட்டிகளிலும் அவர் சிறப்பாக விளையாடாத நிலையில் அனைத்திற்கும் சேர்த்து வைத்து நேற்றைய போட்டியில் விளையாடினார்.

ஸ்கோர் செய்வது கடினம்
இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பின்பு ஐபிஎல் போன்ற பெரிய தொடரில் விளையாடி உடனடியாக ஸ்கோர் செய்வது மிகவும் கடினமானது என்று முன்னாள் துவக்க வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் ஒன்றிரண்டு சிறப்பான பந்துகளுடன் சமரசம் செய்து கொள்பவராக படிக்கல் தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து திறமையும் உள்ளது
அவர் இதேபோல தொடர்ந்து சிறப்பாக விளையாடும் நிலையில் கூடிய விரைவில் இந்தியாவிற்காக விளையாடுவார் என்றும் அதற்கான அனைத்து தகுதிகளும் அவருக்கு உள்ளது என்றும் கம்பீர் மேலும் கூறினார். அவரை விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணியும் முன்னேற்றும் என்றும் கம்பீர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications