
ரோகித்தின் கேப்டன்சி
விராட் கோலியிடம் இருந்து கேப்டன்சி பதவியை ஏற்ற ரோகித் சர்மா, ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் சிறப்பான சாதனைகளை படைத்துள்ளார். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் அவரின் கேப்டன்சி கேள்விக்குறியாகவே இருந்தது. கடந்த 2022ம் ஆண்டு தொடக்கத்தில் பதவியேற்றுக்கொண்ட போதும், வெறும் 2 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே வழி நடத்தியிருக்கிறார். இதனால் இந்த ஆஸ்திரேலிய தொடர் மீது அவரை ரசிகர்கள் கவனித்தனர்.

கம்பீர் கருத்து
இந்நிலையில் கோலியை அப்படியே ரோகித் காப்பி அடிப்பதாக கம்பீர் கூறியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், ரோகித் சர்மா ஒரு மிகச்சிறந்த கேப்டன் ஆவார். ஆனால் அவருக்கும் விராட் கோலிக்கும் பெரியளவில் வித்தியாசங்கள் இருந்தது கிடையாது. குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலி ஏற்படுத்தி வைத்திருந்த திட்டங்களையும், டெம்ப்ளேட்களையும் ரோகித் பின்பற்றி வருகிறார்.

சொந்த ப்ளான் இல்லை
இந்திய டெஸ்ட் அணியை விராட் கோலி கையாண்ட விதம் அட்டகாசம். ஆனால் ரோகித் சர்மா தனக்கென ஒரு டெஸ்ட் டெம்ப்ளேட்டை இதுவரை உருவாக்கிக்கொள்ளவில்லை. அவர் கோலியின் ஐடியாக்களையும்,வியூகங்களையும் பின்பற்றி வருகிறார். குறிப்பாக அஸ்வின் மற்றும் ஜடேஜா ஜோடியை பயன்படுத்திய விதம் கேப்டன்சி ஒற்றுமைக்கு உதாரணமாக உள்ளது என கம்பீர் கூறியுள்ளார்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் வாய்ப்பு
முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்திய அணி 64.6 சதவீதத்துடன் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. இதனால் இறுதி சுற்றுக்கான போட்டியில் இருந்து தென்னாபிரிக்க அணி வெளியேறிவிட்டது. தற்போது ஆஸ்திரேலியா, இந்தியா,இலங்கை என 3 அணிகள் மட்டுமே போட்டியில் உள்ளன. இன்னும் ஒரு வெற்றி கண்டால் கூட இந்தியா இறுதி சுற்றுக்கு சென்றுவிடும்.


Click it and Unblock the Notifications